ஊற்று

2002 ஒப்பந்த முறிவு குறித்த கோட்பாட்டியல் நோக்கு

கலாநிதி ஏ.ஆர்.எம். இம்தியாஸ்
 
கிந்த ராஜபக்ஷ அரசாங்கமானது இலங்கையில் வடக்கு – கிழக்கை உள்ளடக்கியதான நிலப்பரப்பில் தமிழர்களுக்கான தன்னாட்சி கோரிப் போராடிவரும் அரசியல் இராணுவ பேரியக்கமான தமிழீழ விடுதலைப் புலிகளுடன் அன்றைய அரசாங்கம் பெப்ரவரி 2002 இல் கைச்சாத்திட்டுக் கொண்ட யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அதாவது ரத்துச் செய்வதற்கு எடுத்த தீர்மானமானது, இலங்கை அரசியல் அவதானிகள் பலரையும் ஏனையோரையும் பலத்த ஆச்சரியத்திற்கும் அதிர்ச்சிக்கும் உள்ளாக்கியுள்ள ஒரு விவகாரமாகும். இத்தகையதொரு பின்னணியில் அவர்கள் அவ்வாறான முடிவு எடுக்கப்பட்டது ஏன் என்ற கேள்வியினை எழுப்பி வருகின்றனர்.

யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை ரத்துச் செய்யுமளவிலான தீர்மானத்தை எடுப்பதற்கு அரசாங்கத்தைத் தூண்டியது எது அல்லது எலை என்பதே இன்று எழுந்துள்ள கேள்வியாகும். இதற்குக் கிரமமான ஒழுங்கிலான அரசியல் சம்பவங்களதும் மற்றும் சூத்திரங்கள், சுலோகங்களதும் அடிப்படையில் ஒருவர் பலவேறான விடைகளையும் விளக்கங்களையும் முன்வைக்க முடியும். இந்த வகையில் இக்கட்டுரை, அவ்வாறானதொரு தீர்மானத்தை எடுப்பதற்கு வழிவகுத்திருக்கக் கூடிய காரணங்கள் குறித்து ஆராய முற்பட்டுள்ளது. இது குறியீட்டு அரசியல் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் சில கோட்பாட்டு ரீதியிலான விளக்கங்களை முன்வைக்கும் ஒரு கட்டுரையாகும்.

கோட்பாட்டு அடிப்படையிலான விளக்கங்கள்:


கோட்பாட்டு ரீதியில் சிந்திக்கையில் எப்போதும் மக்கள் அறிவார்ந்த தளத்தில் செயற்பட நினையாது தமது மனச்சாய்வுகளுக்கு ஏற்ப உணர்வு ரீதியாகவே செயற்பட முனைகிறார்களென்பது ஏற்றுக் கொள்ளப்படவேண்டியதொரு உண்மையாகும். ஒரு பதற்றமான அரசியல் சூழ்நிலையில் அல்லது அத்தகையதொரு பின்னணியில் தலைவர்ள் நேரடியாகவே அம் மக்களது உணர்வுகளைக் கிளற முற்பட்டு விடுகிறார்கள் என்பது அவதானிக்கப்பட வேண்டியதொரு அம்சமாகும். குறியீட்டு அரசியல் தொடர்பில் ஆராய்கையில், மக்களை மிக இலகுவாக இரையாக்கும் அவர்களை உணர்ச்சி வசப்படுத்தி ஆட்டிவைக்கக் கூடிய அடையாளங்கள் என்ற ரீதியில் உணர்வுகளைத் தூண்டும், சூத்திரங்கள் - சுலோகங்களான யுத்தம் சார்ந்த அல்லது சமாதானத்திற்கு எதிரான கோஷங்கள், கொட்டி – பதாகைகள் இன்னும் தேசிய கீதம், இனக்குழும வரலாறுகள்,  நேசத்திற்குரிய தாய் தந்தையர் நாடு குறித்த கற்பிதங்கள் அல்லது பிரமைகள் போன்றனவே பிரதான தோற்றுவாய்களாக இருப்பதை ஏற்றுக் கொள்ள முடியும். உணர்வு ரீதியாக மக்களை வசப்படுத்தி எழுச்சிக்குத் தூண்டக்கூடிய ஆயதங்களாக சமூக மேலோங்கிகளால் இவையே வெகுவாகப் பயன்படுத்தப்படுகின்றன. அதிகார மையங்களை நிலை நிறுத்தவும் இருப்பினைத’ தக்க வைத்துக் கொள்ளவும் அவர்களுக்கிருக்கும் ஒரே மார்க்கம் இதைவிட வேறெதுவுமில்லை.

அரசியல் அரங்கில், அடையாளக் குணாம்சங்களை வெளிக் கொணரும் இக் குறியீடுகள், பெரும் பங்கினை வகிக்கின்றன என மானிட பண்பியல் ஆய்வாளரான சிட்சிஸ்லோமாச் கூறுகிறார். அவை மக்களை உணர்ச்சிகளைத் தூண்டி எழுச்சிகளுக்கும், கிளர்ச்சிகளுக்கும் உள்ளாக்குவதற்கு நன்கு பயன்படுத்தப்படுகின்றன.

அரசியல்வாதிகளோ, அரசியல் இயக்கங்களது தலைவர்களோ மக்களைத் தமது அணிகளுக்குள் உள்ளீர்த்துக் கொள்வதுடன், சடுதியான உணர்வகளுக்கு ஆட்படுத்தி தமது குறிக்கோள்களை நிறைவேற்றிக் கொள்கின்றனர். இந்த வகையில், மக்களும் தம்வசமிழந்து அரசியல்வாதிகளின் போக்கிலேயே கட்டுண்டவர்களாகச் செயற்படுகின்றனர். இவ்வாறாக இலகுவாக மக்கள் ஆதரவை மிகப் பரந்தளவில் திரட்;டிக் கொள்ள முடிவதற்கான காரணம் என்னவெனில், மக்கள் அதீத சக்தி வாய்ந்த குறியீடுகளான வீரவரலாறுகள் ஆவேசமான இனப்பற்று மற்றும் தொன்மங்கள், கலாசாரம், மதம், பாரம்பரிய கற்பிதங்கள் போன்ற அடையாளக் கூறுகளினூடாக அவற்றினடியாக தூண்டப்படக் கூடியோராக ஏற்கனவே அவைமீது அதீத பற்றுடையோராய் உள்ளார்ந்த பிடிமானங்கள் கொண்டோராய் இருப்பதாகும்.

படித்த வர்க்கத்தினரை உள்ளடக்கிய மேலோங்கிகள், அரசியல்வாதிகள் அல்லது தேசியத் தலைவர்கள் சூத்திரங்கள், சுலோகங்களின் மூலமாக வரலாற்றுப் பெருமைகளை உன்னதங்களை புகழ்ந்து போற்றும் போதும், இன – மத பிரிவினைகளின் அடிப்படையில் தமது விரோதிகள் மீது போர் தொடுக்கும் போதும், உள்நாட்டு நெருக்கடிகளின் விளைவுகளுக்கு வெளிநாடுகளைத் தூற்றி வசைபாடும் போதும், புராதன மன்னர்கள் கால ஆட்சியினை மீண்டும் கொண்டு வருவதற்கு உறுதி பூணும் போதும், புராணிக வீரர்களது சாகசங்களைப் புகழ்ந்து பரணி பாடும் போதும், கொடிகளை வானளாது உயர்த்தி ஆவேச பிரகடனங்களை உதிர்க்கும் போதும் குறிப்பிட்ட இனக் குழுமத்தின் மொழி, மத பாரம்பரியங்களுக்கு உத்தியோகபூர்வ ரீதியான அந்தஸ்து பாதுகாப்பு மற்றும் சலுகைகளை முன்மொழிந்து ஆரவாரிக்கும் போதும், வருங்கால சந்ததியினரின் இளந்தளிர்களான குழந்தைகளை அரவணைத்து முத்தமிடும் போதும் மக்கள் அளவுகடந்த உணர்ச்சிகளுக்கும் நெகிழ்ச்சிகளுக்கும் ஆட்பட்டு விடுகின்றனர். மக்களுணர்வுகளை இலக்கு வைத்து, அவர்களைத் தூண்டி எழுச்சிகளை உண்டு பண்ணக் கூடிய சக்தி வாய்ந்த குறியீடுகளைப் பயன்படுத்துவதே அரசியல்வாதிகளின் வெற்றிகளுக்கு எப்போதும் இடப்படும் அடித்தளமாக இருக்கின்றது.

நாட்டின் குறிப்பிட்டதொரு நிலப்பகுதியில் ஆதிக்கம் பெற்றவர்களாக இன அல்லது மதம் சார்ந்த ஒரு குழுவினர் பெரும்பாண்மையினராக இருக்கும் பட்சத்தில், இக் குறியீட்டு அரசியலின் பிரதான விளைவாக அவர்களுக்கு எதிராக வன்மம் சார்ந்த உள்நாட்டு யுத்தம் கூட மூண்டுவிடக் கூடிய அபாயம் நேரலாம். குறிப்பிட்ட இனப்பிரிவினர் பூகோள ரீதியாக தமக்கான பூர்வீக நிலப்பரப்பை தமது தாயகமாகக் கொண்டிருப்பதற்கு உரித்துடையோராகத் தம்மைக் கருத நேரும் பட்சத்தில், அவர்களுக்கு எதிரான பகைமை நியாயப்படுத்தப்படுகிறது. இதற்கு அடிப்படைக் காரணமாக இருப்பது கற்பிதங்களே என்கிறார் எஸ்.ஜே.கொவ்மான்.

உதாரணமாக இலங்கையின் வடக்கு – கிழக்கு பிரதேசத்தில் பெரும்பான்மையினராக வாழுகின்ற தமிழ் மக்கள் தாம் அரசாங்கத்தினாலும் பெரும்பான்மை சிங்கள அரசியல்வாதிகளாலும் கடுமையான பாரபட்சங்களுக்கும் ஒடுக்கு முறைக்கும் உள்ளாக்கப்பட்டு வருவதாகக் கூறி, தமது தாயகத்தினை உள்ளடக்கியதாக தமிழர்களுக்கென தமிழீழம் கோரி, தீவிரமான பிரசாரங்களிலும் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதேவேளை அரசியல்வாதிகள் எப்போதும் போல தேர்தல் லாபங்களை முன்னிறுத்தி சிங்கள மக்களது இன உணர்வுகளைத் தூண்டும் கையில் தீவிர பிரசாரங்களில் ஈடுபட்டு வருவது மாத்திரமன்றி, தமிழர்களது நியாயபூர்வமான பிரச்சினைக்கு சம்ஷ்டி அடிப்படையிலான சுயாட்சிக்கான அரசியல் தீர்வினைக்கூட எட்டமுடியாதவாறும் எதிர்த்து வருகின்றனர். சிங்கள அதிகாரவர்க்கத்தினர் இந்த வகையில் தமிழர்களுக்கு எதிரான இன உணர்வுகளைத் தூண்டி அவர்களுக்கு எதிராக சிங்கள மக்கள் கொதித்தெழச் செய்யக்கூடிய விதமாக தீர்வு நோக்கில் பிரித்தானியர் அறிமுகப்படுத்திய ஒற்றையாட்சி முறைமை என்ற வரையறைக்கு அப்பால் செல்ல முடியாதவாறு மட்டுப்படுத்துவதன் மூலம் நிலைமைகளை மேலும் மேலும் கடினமடையச் செய்தும் வருகின்றனர்.

ஒப்பந்த ரத்தின் பின்னணியில்…..

இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்தே இன அடிப்படையிலான பிளவுகள், குரோதங்களைப் பிரதானப்படுத்தி அத்தகைய அடையாளங்கள் - குறியீடுகள் மூலமாக இலாபமீட்டுவதே மேலோங்கிகளின் அரசியலில்  ஒரு பிரதான போக்காக இருந்து வந்துள்ளது. குறுகிய தேர்தல் - வாக்காளர் மைய தந்திரோபார அரசியலே அன்று தொடக்கம் இலங்கையில் கோலேச்சிவ ந்துள்ளது. ஆரம்பத்திலிருந்தே சிறுபான்மையினருக்கு எதிராக மிகுந்த வன்மத்துடன் முன்னெடுக்கப்பட்டு வந்த இந்த அரசியல் போக்கு கடும் நம்பிக்கையீனங்களையும் பீதியையுமே சிறுபான்மையினர் மத்தியில் தோற்றுவித்திருந்தது. சிங்கள அரசியல் கட்சிகளுக்கு இத்தகையதொரு பின்னணி மேலும் முனைப்புடன் இயங்குவதற்கான வாய்ப்பானதொரு சூழ்நிலையை தோற்றுவித்துக் கொடுத்திருந்தது. 

சிங்கள மக்களை பெரும்பாண்மையினராகக் கொண்ட தென்பிராந்திய பிரதேசத்தைச் சேர்ந்தவரான ராஜபக்ஷ மிகந்த தீவிரத்துடன் சிங்கள சார்பிலான கொள்கைகளையும் கோஷங்களையும் நவம்பர் 17, 2005 தேர்தலில் முன்வைத்து ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றினார். தேர்தல் பிரசார காலத்தின் போது தனக்கேயுரியதொரு பாணியில் மிகுந்த தந்திரோபாயத்துடன் சிங்கள மக்களுக்கு தன்னை ஒடுக்கு முறைக்குள்ளானதொரு சிங்கள மக்களின் பிரதிநிதியைப் போல இனங்காட்டியும் கொண்டார். இத்துடன் தென்னிலங்கைச் சிங்கள மக்களது அனுதாபத்தையும் ஆதரவையும் சுவீகரித்துக் கொள்ளும் வகையில், குறியீட்டு அரசியல் சார்ந்த கோஷங்களை மிகத் தாராளமாகவே பயன்படுத்தியும் கொண்டார். எல்.ரி.ரி.ஈ யினருக்கு எதிராக மிகக் கடுமையான நிர்ப்பந்தங்கள் மற்றும் நிபந்தனைகள், ஜனாதிபதி குமாரதுங்க எல்.ரி.ரி.ஈ யினருடன் செய்து கொண்ட சுனாமி ஒப்பந்தத்தை ரத்தச் செய்வதற்கான வாக்குறுதி, நோர்வே அனுசரணையிலான யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை முற்றாக மாற்றுவது, நாட்டின் நெருக்கடிக்கு மேற்கு நாடுகள், குறிப்பக நோர்வே மீதான  வசைபாடல் போன்றவற்றுடன் தேசியக் கொடி, குழந்தைகளை அரவணைத்தல் ஆகிய உத்திகளும் இவற்றிலடங்கும். இவையெல்லாவற்றுக்கும் மகுடம் வைக்கும் வகையில், சிங்கள தேசியவாதக் கட்சிகளான ஜே.வி.பி மற்றும் ஜாதிக ஹெல உறுமயவுடனான ஒப்பந்தங்கள் ராஜபக்ஷவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தனவாய் இருந்தன. எல்.ரி.ரி.ஈ யை மிகக் கடுமையாக எதிர்த்து வரும் இவை, ராஜபக்ஷ பதவிக்கு வரும் போது, யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை நீக்க வேண்டும் என முன் நிபந்தனையையும் விதித்தன.

மக்களைக் கவரும் குறியீட்டு அரசியல் அடிப்படையிலான நிகழ்ச்சி நிரலின் மூலம் பதவியினைக் கைப்பற்றும் அரசியல்வாதிகள் தாம் உணர்ச்சிபூர்வமாக அளித்த வாக்குறுதிகளை, மறந்து செயற்படுவது என்பது சற்றுக் கடினமானது. உதாரணமாக, இலங்கை அரசியலில் முதல் முதலாக நிறுவன மயப்பட்ட சிங்கள பேரினவாதத்தை அறிமுகப்படுத்திய எஸ்.டபிள்யூ. ஆர். டீ. பண்டாரநாயக்காவினால் அவர் கட்டவிழ்த்து விட்ட உணர்ச்சி கொந்தளிப்புக்களை அடக்க முடியாத நிலையே ஏற்பட்டது. சிங்கள மக்களது நலன்களுக்கு கேடு விளைவிக்கும் வகையில் தமிழ் மக்களுக்கு சலுகைகளை பண்டாரநாயக்கா அள்ளி வழங்கிவிட்டதாகக் கருதிய தீவிரவாத பிக்கு ஒருவரால், 1959இல் அவர் படுகொலை செய்யப்பட்டார். சமஷ்டிக்கு எதிரான அல்லது சமாதானத்திற்கு எதிரான நிலைப்பாட்டினை எடுத்து, தேர்தலில் வெற்றியீட்டிய ராஜபக்ஷ மிகக் கவனமாக, தந்திரோபாயத்துடன் தமது கொள்கைகளை வகுத்துக் கொண்டு செயற்பட்டார். சிங்கள மக்களது ஆதரவுப் பலத்தைத் திரட்எ, அவர்களது நம்பிக்கையினை வென்றெடுப்பதே அவரது குறிக்கோளாகும். இதில் கடும் போக்காளர்களுள் பிரதான சக்தியாகிய பாராளுமன்றத்தில் 39 ஆசனங்களைக் கொண்ட ஜே.வி.பியினரின் ஆதரவினை எந்த விதத்திலும் இழப்பதற்கு அவர் தயாரில்லை.

ஜே.வி.பி யிடமிருந்து கிளம்பிய அழுத்தமும் நிர்ப்பந்தமும், ராஜபக்ஷ நிருவாகத்தை யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை ரத்துச் செய்யும் தீர்மானத்தை எடுக்கத் தூண்டிய விவகாரத்தில் பெரும் பங்கினையாற்றியிருந்ததென்பது பரவலானதொரு அபிப்பிராயமாகும். சிங்கள சார்பிலான நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்ததன் மூலம், பதவிக்கு வந்த ராஜபக்ஷவுக்கு தேர்தல் காலத்தில் அவரது உணர்ச்சிக் கோஷங்களையும் வாக்குறுதிகளையும் உண்மையென்று விழுங்கிய ஏழை மக்களுக்கு பொருளாதார விடுதலையை மற்றும் நல மேம்பாடுகளை எவ்வாறு அளிப்பதென்பது பாரியதொரு சவாலாக உருவெடுத்துள்ளது.

ராஜபக்ஷ ஆட்சியினரின் முன்நிலையில் இப்போது இரு தெரிவுகள் மாத்திரமே உள்ளன:

(1) தொடரும் யுத்தத்தினை முடிவுக்குக் கொண்டு வரக் கூடியவாறு அரசியல் தீர்விகை; காணுதல்.

(2) இன அடிப்படையிலான குறியீட்டு அரசியலை மேலும் தொடர்வது. ஜே.வி.பியினரின் சமாதான எதிர்ப்பு நிகழ்ச்சி நிரலுக்கு ஆட்சியினர் இணங்கியிருப்பதைப் பார்க்கையில், அவர்கள் இரண்டாவது தெரிவினையே தழுவியிருக்கின்றனர் எனத் தோன்றுகின்றது. சிங்கள மக்களிடமிருந்து வரும் அதிருப்தி அலையினைத் திசை திருப்புவதற்கும் அவர்களுக்கிருக்கும் உபாயம் இதுவேயாகும்.

உண்மையிலேயே யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை ரத்துச் செய்ய ராஜபக்ஷ எடுத்திருக்கும் தீர்மானம், தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலைப்பாட்டினை நியாயப்படுத்தும் மேலும் வலுப்படுத்தும் ஒன்றாகவே கருதப்பட வேண்டும். அரசாங்கமும் அதன் நிறுவனங்களும், சிங்களவர்கள் சார்பிலானவையென்றே இலங்கைத் தமிழர்கள் நம்புகின்றனர். சிங்களத் தரப்பிலிருந்து நீதியான தீர்வு எதுவும் கிடைக்கப் போவதில்லை என்ற எண்ணமே அவர்கள் மனதில் மேலோங்கியுள்ளது. நூற்றாண்டுக்கும் பழைமை வாய்ந்த ஒற்றையாட்சி கட்டமைப்பிலிருந்து விலகும் விதத்தில் எத்தகையதொரு அரசியல் தீர்வினையும் முன்வைக்கும் திராணியற்றனவாகவே சிங்கள அரசியல் நிறுவனங்கள் இருக்கின்றன. சிங்களவர்களின் பிரிக்க முடியாத ஒரு அடையாளமாகவே நாட்டில் ஒற்றையாட்சி அமைப்பானது தொடர்ந்தும் பேணப்பட்டு வருகின்றது.

அரசியல் அரங்கில் இடையறாது மேலும் மேலும் அரசியல்வாதிகளால் குறியீட்டு அடிப்படையிலான அரசியல் கொள்கைகளும் கோஷங்களும் முனைப்புடன் தீவிரப்படுத்தப்பட்டு வரும் ஒரு சூழ்நிலையில் ராஜபக்ஷ நிருவாகதடதழனரழனட நடவடிக்கையால், நாடு மீட்சியற்றதொரு நிலைக்கே அதள பாதாளத்தை நோக்கித் தள்ளப்பட்டு வருவதாகவே காட்சியளிக்கிறது. இத்தகையதொரு நிலைமை தொடரும் பட்சத்தில் பேரழிவான விளைவுகள் எக் கணமும் எற்பட்டு விடுமோ என அஞ்ச வேண்டியுள்ளது. குறியீட்டுக் கொள்கைகளின் மூலம் சிறுபாண்மையினரது கலாசார அடையாளங்களை முன்நிறுத்தி அவர்கள் மீது இலக்கு வைக்கும் போது ஓரங்கட்டப்படும் அல்லது ஒடுக்கு முறைகளுக்கு உள்ளாகும் சிறுபாண்மையினர் முழு அளவில் அரசிற்கு எதிராக திரண்டெழுவது எதிர்பார்க்கப்பட வேண்டிய இயல்பானதொரு வெளிப்பாடேயாகும். அரசிடமிருந்தும் அதனுடைய நிறுவனங்களிடமிருந்தும் நம்பிக்கையிழக்கும், ஒரங்கட்டப்படும் சிறுபாண்மையினர் தமது போராட்டத்தைத் தொடர்வது தவிர்க்க முடியாததொன்றாகி விடுகிறது. ஆட்சியிலிருக்கும் அதிகார வர்க்க மேலோங்கிகளாலும் எதிர்கட்சி அணியிலுள்ள மேலோங்கிகளாலும் நிறுவனமயப்படுத்தப்பட்டு வருகின்ற விடாப்பிடியான, பகைமையும் வன்மமும் சார்ந்த குறியீட்டு அரசியல் கொள்கைகளினாலும் நடவடிக்கைகளினாலும் அவர்கள் தமிழர்களுக்கென தனிநாடு கோரி போராடி வரும் அரசியல் - இராணுவ பேரியக்கமான தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினையே ஆதரிக்க முற்படுவர். வடக்கு கிழக்கில் தமிழர்களுக்கு சுதந்திரமும், தன்னாட்சி இறைமையும் கொண்ட தனிநாட்டுக்கான அவர்களது போராட்டமும் ஒருவகையில் இத்தகையதொரு நிலைமையின் பிரதிபலிப்பாகவே தோன்றுகின்றது.

சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகத்தினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகளின் குறியீட்டு அரசியல் நிகழ்ச்சி நிரல்கள் காரணமாக நாடு, நவீனத்துவம் சார்ந்த முன்னேற்றங்களையும் அபிவிருத்தி இலக்குகளையும் எட்ட மடியாத நிலையில் பாரிய சவால்களை எதிர்நோக்கியவாறு முடங்கிப் போயுள்ளது. இலங்கை உரியவாறு முன்னேற்றங்களையம் எற்ற அபிவிருத்திகளையும் எய்த வேண்டுமாயின் அரசியல்வாதிகளும் தலைவர்களும் காலாதி காலமாக பின்பற்றி வரும் தீங்கு விளைவிக்கும் நடைமுறைகளையும் குறுகிய தேர்தல் அபிலாஷைகளுக்கான தந்திரோபாயங்களையும் முன்னிறுத்தும் அரசியல் மற்றும் ஆட்சி முறைகளை முற்றாக ஒதுக்கி, நவீனத்துவப் பாங்கும் விரிந்த பார்வையும் கொண்டதொரு புதிய யுகத்திற்குள் பிரவேசிக்க வேண்டும்.

இலங்கை அரசியலில் பகைமைகளும் எதிர்ப்புணர்வு வன்மங்கள் சார்ந்த கொள்கைகளுமே தொடர்ந்தும் ஆதிக்கம் செலுத்துமாயின், குறியீட்டு அரசியலின் விகாரமான, பாதகமான விளைவுகள் மற்றும் தாக்கங்கள் குறித்து ஆராயும், பகுப்பாய்வு செய்யும் ஆய்வாரள்களுக்கு இலங்கையே ஒரு அசலான ஆய்வுக் களமாக மாறும் நாள் வெகு தூரத்தில் இல்லை.

[கலாநிதி ஏ.ஆர்.எம். இம்தியாஸ், பென்சில்வேனியா-ரெம்பிள் பல்கலை கழகத்தினை சார்ந்த அரசியல் விஞ்ஞான பீட விரிவுரையாளர்] - தமிழாக்கம்: ஜி.ரி.கே

Post a comment

(The comment may need to be approved by Ootru.com. Until then, it won't appear on the entry. Thanks for waiting.)

ஊற்றில் அண்மையில் பிரசுரமானவை