ஊற்று

கொசோவோவும் இலங்கையும் : உள்ளக முரண்பாடுகள் புறச்சக்திகளின் தலையீடுகளுக்கு வழிகோலும்

டி.பி.எஸ். ஜெயராஜ்

“சுதந்திரம் என்பது கடவுளில் தங்கி வாழ்தலையே குறிக்கும்” என முன்னாள் புனித தோமஸ் கல்லூரியின் மதகுரு வணக்கத்திற்குரிய எல்.ஜே.பி. பெர்னாண்டோ தமது குறுகியநேர ஆராதணைகளின் போது குறிப்பிடுவார்.

பெப்ரவரி மாதம் 17ம் திகதி கொசோவோவின் ஒருதலைப்பட்சமான சுதந்திரப் பிரகடனத்தின் போது எனக்கு இந்த வாசகம் நினைவிற்கு வந்தது. உண்மையாகவே கொசோவோ சுதந்திரம் அடைந்துள்ளதா? அல்லது பலம் பொருந்திய மேற்குலகத்தில் தங்கிநிற்கிறதா?

கொசோவோ சுதந்திரமான இறைமையுடைய ஒரு நாடா? அல்லது மேற்குலகத்தின் கைப்பொம்மையா?

கொசோவோ பிரதமர் ஹாசீம் தாசியினால் வாசிக்கப்பட்ட சுதந்திரப் பிரகடனம் ஒரு மாய விம்பமாகவே நோக்கப்படுகிறது.

சுதந்திரப் பிரகடனத்தினூடாக யுகோஸ்லாவியாவுடனான பிணைப்பு அறுத்தெறியப்பட்டது.  கொசோவோ சுதந்திரமானதும், இறைமை மிக்கதுமான ஒரு தனி இராச்சியம் என பிரதமர் ஹசீம் தாசி பிரகடனம் செய்தார்.

இந்த சுதந்திரப் பிரகடனத்தின் ஊடாக எமது மக்களின் விருப்பங்கள் பிரதிபலிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

ஐக்கிய நாடுகளின் விசேட தூதுவர் மார்டி அதிசாரியின் கொசோவோவிற்கான தீர்வுத் திட்டப் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த சுதந்திரப் பிரகடனத்தை பிரதமர் தசி நியாப்படுத்தியுள்ளார்.

 

(மார்டி அதிசாரி)

மார்டி அதிசாரி கொசோவோவிற்கு விதந்துரைத்த திட்டம் என்ன?

முன்னாள் பின்லாந்து அதிபரும், ஐக்கிய நாடுகளின் விசேட தூதுவருமான மார்டி அதிசாரி கொசோவோவிற்கான மேற்பார்வை செய்யப்பட்ட சுதந்திரத் திட்ட வரைவொன்றை 2007 ஆண்டு மார்ச் மாதம் முன்வைத்தார்.

எனினும், இந்த தீர்வுத் திட்டத்தை சேர்பியாவும், ரஸ்யாவும் நிராகரித்தன.

அதிசாரியின் தீர்வுத் திட்டம் வாபஸ்பெற்றுக்கொள்ளப்பட்டது. சுதந்திரத்திற்கான நிகழ்ச்சி நிரலொன்று தயாரிக்க இந்த நிலைமை வழிகோலியது. 

இந்தத் தீர்வுத் திட்டம் சுதந்திரப் பிரகடனத்தை மேற்கொள்ள வழியமைத்துக் கொடுத்தது.

அதிசாரியின் தீர்வுத் திட்டம் கொசோவோ சுதந்திரத்திற்கு எவ்வாறான பங்களிப்பை நல்கியது?

1999ம் ஆண்டு ஜூன் மாதம் 10ம் திகதி ஐக்கிய நாடுகள் அமைப்பினுடைய 1244ம் சரத்தின் அடிப்படையில் யுகொஸ்லாவிய படையினர் கொசோவோவிலிருந்து வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

மேலும், ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையிடம் கொசோவோவின் நிர்வாகம் ஒப்படைக்கப்பட்டது.

1244ம் சரத்தில் கொசோவோவிற்கான சுதந்திரம் பற்றிக் குறிப்பிடப்படவில்லை. யுகஸ்லாவிய சமஷ்டி குடியரசிற்குள் கணிசமானளவு சுயாட்சி அதிகாரங்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகளின் 1244ம் சரத்தின் 10ஆவது பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் பொறுப்பின் கீழ் இந்த நடைமுறை அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

2000மாம் ஆண்டில் சேர்பிய அதிபர் மிலொச்சிவிக்கின் வீழ்ச்சியைத் தொடர்ந்து, தமது சொந்த தந்திரோபாய காரணிகளை முன்னிலைப்படுத்தி அமெரிக்கா கொசோவோவை சுதந்திரப் பாதைக்கு தள்ளியது.

ஐக்கிய நாடுகளின் சட்டங்களுக்கு முரணாகவே இந்த நடைமுறை காணப்பட்டது.

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்பினரான ரஸ்யா கொசோவோ சுதந்திரத்திற்கு மிகப் பெரிய முட்டுக்கட்டையாக அமைந்தது. 

கொசோவோவேவின் சுதந்திரம் நோக்கிய முன்னகர்வுகளை ரஸ்யா தடுத்து நிறுத்தியது.

எனினும், ஐரோப்பாவின் முக்கிய நாடுகளுடைய ஆதரவை அமெரிக்காப் பெற்றுக்கொண்டது. கொசோவோவிற்கு வரையறுக்கப்பட்ட சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுக்கும் எண்ணத்தில் பாதுகாப்புச் சபைக்கு அழுத்தங் கொடுக்கும் ஒரு சாதனமாக அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியத்தை பயன்படுத்திக் கொண்டது. 

ஐக்கிய நாடுகளின் விசேடப் பிரதிநிதி மார்டி அதிசாரியினால் பரிந்துரை செய்யப்பட்ட திட்ட வரைவின் அடிப்படையில் இந்த சுதந்திர முன்னகர்வுகள் முன்னெடுக்கப்பட்டன.

இந்தப் பின்னணியின் கீழ் கொசோவோவிற்கான சுதந்திரம் அதிசாரியின் திட்ட வரைவுகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதென்பது வெளிப்படையானதொன்றாகும்.

ஏழு பந்திகளைக் கொண்ட கொசோவோ சுதந்திரப் பிரகடனத்தில் எட்டு தடவைகள் மார்டி அதிசாரியின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதன் மூலம் இதனை தெளிவாக புரிந்துகொள்ள முடியும்.

இந்த சுதநதிரப் பிரகடனத்தின் பிரதான சரத்துக்கள் பின்வருவனவாகும்.

* கொசோவோ சுதந்திரம் தொடர்பான மார்டி அதிசாரியின் திட்டத்தில் அடங்கியுள்ள அனைத்து விடயங்களையும் பூரணமாக ஏற்றுக் கொள்கின்றோம். அத்துடன் கொசோவோ தொடர்பாக பரிந்துரை செய்யப்பட்டுள்ள எதிர்காலத் திட்டங்களை வரவேற்கின்றோம்.

* அதிசாரி திட்ட வரைவில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து கொள்கைகளும் கொசோவோவின் அரசியல் சாசனத்தில் உள்வாங்கப்பட வேண்டும்.

* அதிசாரி திட்ட வரைவில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் உரிய வகையில் அமுல்படுத்தப்படுகின்றனவா என்பது குறித்து கண்காணிப்பதற்கு சர்வதேச சிவில் பிரதிநிதியொருவருக்கு அழைப்பு விடுப்பதுடன், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்படும்.

* நேட்டோ தலைமையிலான சர்வதேச இராணுவப் படையினரால் கொசோவேவில் பாதுகாப்பு கடமைகள் முன்னெடுக்கப்படுவதனை நாம் வரவேற்கின்றோம். ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு பேரவையின் 1244 (1999) சரத்தின் அடிப்படையிலும், அதிசாரியின் திட்ட வரைவின் பிரகாரமும் பாதுகாப்புகாப்பு கடமைகள் முன்னெடுக்கப்படும். குறிப்பாக கொசோவோவில் பாதுகாப்பு முறைமைகள் திருப்திகரமாக அமைக்கப்படும் வரை இந்த நடைமுறை தொடரும்.

* அதிசாரி திட்டத்தின் 8ம் இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு கொசோவாவின் சர்வதேச எல்லைகள் நிர்ணயிக்கப்படும்.

இறுதியாக, அதிசாரி திட்ட வரைவில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து பரிந்துரைகளுக்கும், விதிகளுக்கும் சட்டரீதியாக கொசோவோ கட்டுப்பட்டது என்பது இத்தால் உறுதி செய்யப்படுகிறது.

விசேட தூதுவர் மார்டி அதிசாரியின் திட்டத்தை தழுவியதாகவே கொசோவோவின் சுதந்திரப் பிரகடனம் அமைந்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.

கொசோவோவின் அனைத்து சட்ட யாப்புக்களிலும் அதிசாரியின் திட்ட வரைவு முன்னிலைப் பெற்றிருந்தது. எதிர்காலத்தில் சர்வதேச சமூகத்தின் பங்களிப்பு குறித்து தெளிவாக விளக்கப்பட்டிருந்தது. அதிசாரியின் திட்டவரைவில் காணப்படும்  அநேகமான சரத்துக்கள் ஏற்கனவே அமுலில் உள்ளன.

சுதந்திர போட்டியுடைய திறந்த பொருளாதாரக் கொள்கைகளை உடைய நாடாக கொசோவோ காணப்படும் என அதிசாரியின் திட்டத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணும் எனவும், அரச வருமானங்கள் குறித்து உன்னிப்பாக அவதானிக்கப்படும் பொறிமுறையொன்று உருவாக்கப்படும் எனவும் விதந்துரைக்கப்பட்டிருந்தது.

பொதுமுயற்சியான்மை மற்றும் சமூக முயற்சியான்மை நிறுவனங்களை கொசோவோ நம்பிக்கை முகவர் நிதியம் தனியார் மயப்படுத்தப்பட வேண்டும் என அதிசாரி திட்டத்தில் வலியுறுத்தப்பட்டிருந்தது.

நூற்றுக் கணக்கான பொதுமுயற்சியான்மை மற்றும் சமூக முயற்சியான்மை நிறுவனங்களை  கொசோவோ நம்பிக்கை முகவர் நிலையம் ஏற்கனவே தனியாருக்கு விற்பனை செய்யதுள்ளது.

இந்த தனியார் மயப்படுத்தல்களின் காரணமாக பல தொழிலாளர்கள் ஆத்திரமடைந்தனர். 

உண்மையில் இந்த தனியார் மயப்படுத்தல் நடவடிக்கைளின் போது பல்வேறு ஊழல் மோசடிகள் இடம்பெற்றன. 

கொசோவோ, சர்வதேச சமூகத்தில் ஒரு உறுப்பினராக செயலாற்றக்கூடிய அமைப்பு முறைமையை அதிசாரி தமது திட்ட வரைவின் மூலம் ஏற்படுத்திக் கொடுத்தார். குறிப்பாக மாநாடுகள், பேச்சுவார்த்தைகளில் சர்வதேச சமூகத்தின் ஒரு பங்களிப்பாளராக கொசோவோவை அமர்த்தக்கூடிய திட்டத்தை அதிசாரி வகுத்திருந்தார்.

21 பேரைக் கொண்ட ஆணைக்குழுவினால் கொசோவோ அரசியல் சாசனம் வகுக்கப்படும். 9 நீதவான்களைக் கொண்டமைந்த அரசியல் சாசன நீதிமன்றின் மூன்று உறுப்பினர்களை ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றத் தலைவர் தெரிவு செய்வார்.

கொசோவோவின் நீதிமன்ற ஆணைக்குழு 13 உறுப்பினர்களைக் கொண்டமைந்ததாக காணப்படும். இதில் இரண்டு பேர் சர்வதேச சமூகத்தின் பிரதிநிதிகளாவர். நீதிமன்ற ஆணைக்குழுவின் நியமனங்கள் தொடர்பாக இவர்கள் கண்காணிப்பில் ஈடுபடுவர்.

புதிய கொசோவோவின் பாதுகாப்புப்படை 2,500க்கு மேற்படாத இலகு ஆயுதங்களைக் கொண்ட படையணியாக உருவாக்கப்படும். மேலும் 800 உதிரிப் படைவீரர்கள் சிவில் பாதுகாப்பு மற்றும் மீட்புப் பணிகளுக்காக அமர்த்தப்படுவர்.

கொவோவோவின் முதன்மையான அதிகாரங்களைக் கொண்டவராக சர்வதேச சிவில் பிரதிநிதி செயற்படுவார். ஐரோப்பிய ஒன்றியத்தின் விசேட பிரதிநிதியாகவும் இவர் கடமையாற்றுவார்.

சர்வதேச வழிகாட்டல் குழுவினால் சர்வதேச சிவில் பிரதிநிதி நியமிக்கப்படுவார்.; பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஐரோப்பிய ஆணைக்குழு, நேட்டோ மற்றும் ரஸ்யா ஆகியன சர்வதேச வழிகாட்டல் குழுவில் அங்கம் வகிக்கின்றன.

சர்வதேச சிவில் பிரதிநிதியின் தீர்மானங்களை அங்கீகரிக்கும் பூரண அதிகாரம் சர்வதேச வழிகாட்டல் குழுவிற்கு உள்ளது.

கொசோவோ சுதந்திரப் பிரகடனத்தை மேற்கொள்வதற்கு இரண்டு தினங்களுக்கு முன்னர் சர்வதேச சிவில் பிரதிநிதியாகவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் விசேட பிரதிநியாகவும் பொஸ்னிய - ஹெர்சகொவின்யாவிற்கான முன்னாள் நேட்டோ அரசியல் ஆலோசகர் பீட்டர் பெயித் நியமிக்கப்பட்டார்.

முன்னாள் ஜேர்மனியின் அமெரிக்கத் தூதுவர் லெபிஸிஸ் அவரின் துணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

அதிசாரியின் திட்ட வரைவுகளை அமுல்படுத்தும் அதிகாரம் சர்வதேச சிவில் பிரதிநிதிக்கு காணப்பட்டது. மேலும் கொசோவோ நிர்வாகத்தின் சட்டங்களை விஞ்சி தீர்மானங்களை மேற்கொள்வதற்கும், பொதுத்துறை அதிகாரிகளை நியமித்தல் மற்றும்  பதவி நீக்கம் செய்தல் என்பவற்றுக்கான அதிகாரங்கள் சர்வதேச சிவில் பிரதிநிதிக்கு உண்டு.

இதற்கு மேலதிகமாக, கணக்காய்வாளர் நாயகம், சுங்கத் திணைக்களப் பணிப்பாளர் நாயகம், வரி நிர்வாகப் பணிப்பாளர், திறைசேரியின் பணிப்பாளர் நாயகம் மற்றும் கொசோவோ மத்திய வங்கியின் முகாமைத்துவ பணிப்பாளர் ஆகிய நாட்டின் பிரதான நிர்வாகப் பொறுப்புக்களுக்கான நியமனங்களை நேரடியாக சர்வதேச சிவில் பிரதிநிதி மேற்கொள்ள முடியும்.

சர்வதேச சிவில் பிரதிநிதியின் அனுமதியின்றி கொசோவோ சட்டசபையில் உத்தியோகபூர்வமாக சட்டமூலங்கள் நிறைவேற்றப்பட முடியாது.

அதிசாரியின் திட்டத்தில் கொசோவோவிற்கான ஐரோப்பாவின் பாதுகாப்பு கொள்கைகள் பற்றி விரிவாக விதந்துரைக்கப்பட்டுள்ளன. கொசோவோவில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் நோக்கில் ஐரோப்பிய ஒன்றியத்தின் பாதுகாப்புக் கொள்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. 

கொசோவோவில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் நோக்கில் தற்போது ஐரோப்பிய பாதுகாப்பு படைத்தரப்பொன்று நிலைகொள்ளச் செய்யப்பட்டுள்ளது. இது அதிசாரியின் பாதுகாப்பு கொள்கைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதொன்றாகும். மேலும் நேட்டோ தலைமையிலான சர்வதேச இராணுவப் படைப்பிரிவின் (ஐ.பீ.எம்) 16000 துருப்புக்கள் இதன் கீழ் உள்வாங்கப்படுவார்கள்.

துரதிஷ்டவசமாக, எவ்வித அனுமதிகளோ, முன் அறிவித்தல்களோ இன்றி சர்வதேச இராணுவப்படையினர் கொசோவோவின் எந்தப் பிரதேசத்திலும் துருப்பினரை நிலைநிறுத்தக் கூடிய பூரண அதிகாரம் காணப்படுகின்றது.

மாநகரசபைகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பொலிஸ் படைப்பிரிவு என்பவற்றின் முறைமைகள் பற்றியும் அதிசாரியின் திட்டவரைவில் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

கொசோவோவாவினால் பெற்றுக் கொள்ளப்பட்ட சுதந்திரம் ஒரு மிக சிக்கலான கீழ்மட்ட சுதந்திரமாகவே காணப்படுகின்றது.

 

(இந்த நீலநிறத்திலான பின்னணி எதிபார்ப்புக்களை குறிக்கின்றது, இந்த வரைபடத்தினூடாக புதிதாக பிறந்த கொசோவோவின் எல்லைகள் சித்தரிக்கப்பட்டுள்ளதுடன், ஆறு நட்சத்திரங்களும் கொசோவோவில் வாழும் பிரதான ஆறு இனங்களை குறித்து நிற்கின்றது)
 
அதிசாரியின் திட்டமும், அடிமைத்துவ அங்கீகாரத்தின் மூலம் உருப்பெற்ற புதிய கொசோவோ அரசாங்கத்தின் சுதந்திரம் என்ற பதம் மேற்குலகத்தில் தங்கி வாழ்தலையே அர்த்தப்படுத்துகின்றது.

இவ்வாறான வெளிநாட்டு தலையீடுகள் சில வேளைகளில் சுயநலவாத உள்நோக்கத்தை முதன்மைப்படுத்தியதாக இல்லாமல் கூட இருக்கலாம். எனினும், கொசோவோவின் சுதந்திரப் பிரகடனம் மற்றும் யுகோஸ்லாவியாவின் பிளவு என்பவற்றின் மூலம் நல்லதொரு பாடம் எமக்கு புகட்டப்பட்டுள்ளது.

இந்த நிலைமை தலையீடு செய்வதற்கான நியாயப்படுத்தலாக அமைந்துவிடுமே தவிர மெய்யான அக்கறையாக அமையாது. எது எவ்வாறு இருப்பினும் இந்த சக்திகளின் கரிசனை எதாவது ஒரு சுயநலப் பின்னணியை அடிப்படையாகக் கொண்டது என்பதே வெளிப்படையான உண்மை.

ஐக்கிய அமெரிக்கா, பலம் பொருந்திய ஐரோப்பிய நாடுகள் குறிப்பாக பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் ஜேர்மன் போன்ற நாடுகள் கொசோவோவாவின் சுதந்திரப் பிரகடனத்தை அங்கீகரித்துள்ளன.

சுயநிர்ணய அதிகாரம் என்ற கொள்கையினூடாக தேசிய இறைமை என்ற எண்ணக்கரு மறுவுருவம் பெற்றுள்ளது. சேர்பியாவின் இறைமை மிகத் தீவிரமாக மீறப்பட்டுள்ளது.

கொசோவோவிற்கான சுதந்திரத்தை தனிமைப்படுத்தி நோக்குவது உசிதமாகாது. அது இருபதாம் நூற்றாண்டின் இறுதி தசாப்த காலத்திலிருந்து நோக்கப்பட வேண்டியதொன்றாகும்.

தற்போது அந்த வரலாற்றை மீண்டுமொருமுறை எம் கண் முன் கொண்டுவரும் காட்சியாகவே கொசோவோ சர்ச்சை திகழ்கிறது.

கொசோவோவின் சுதந்திரப் பிறப்பு யுகொஸ்லாவியாவின் உச்ச கட்ட பிளவாகவே நோக்கலாம்.

குறிப்பாக சேர்பிய பெரும்பான்மையினரின் கடும்போக்குடைய தேசியவாதமே பிரதான உள்விவகார காரணியாகும். இதன் காரணமாகவே யுகொஸ்லாவியா துண்டுகளாக பிளவுபட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. 

சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் தலையீடு செய்ய கொடூரமான இன அடக்குமுறைச் சம்பவங்களே வழியமைத்துக் கொடுத்தன. இதேபோன்ற சூழ்நிலைகளையுடைய வேறு பிராந்தியங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இந்த உத்வேகத்துடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.

குறிப்பாக யுகொஸ்லாவிலிருந்து பிரிந்து செல்லும் இறுதிக் கட்டத்திலேயே கொசோவோ காணப்பட்டது எனக் கூறின் அது பிழையாகாது.

இனத்துவ சமஷ்டியை அடிப்படைக் கொள்கையாக கொண்ட ஒரு ஆட்சி முறைமையின் கீழ் ஒரே தேசத்தில் பல்லின மக்கள் வாழக்கூடியதொரு முறைமை யுகொஸ்லாவியாவில் காணப்பட்டது.

ஏனைய விடயங்களில் பல்வேறு குறைபாடுகள் காணப்பட்ட போதிலும், டிட்டோவின் தலைமைத்துவம் இந்த ஒருமைப்பாட்டை அர்ப்பணிப்புடன் காத்துவந்தது.

டிட்டோவிற்கு பின்னர் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தவர்கள் இந்த தந்திரோபாயத்தை உரிய முறையில் முன்னெடுக்காததன் காரணமாக ஒரு இடைவெளி தோன்றியது. கடும்போக்குடைய சேர்பிய தேசிய இனவாதம் படிப்படியாக தலைதூக்கத் தொடங்கியது. உண்மையில் இதனை கடும்போக்குடைய தேசியவாதம் என்றே குறிப்பிட வேண்டும் ஏனெனில் யுகொஸ்லாவியா சேர்பியர்களை மாத்திரம் கொண்ட நாடாக திகழவில்லை. 

புறச்சக்திகள் இந்த பிளவை சூட்சுமமாக பயன்படுத்தியமையினால் யுகொஸ்லாவியா பிளவுபடுவது தவிர்க்க முடியாத ஒன்றாக அமைந்தது.

இந்தப் காலப்பகுதியில் அமெரிக்காவும், முன்னாள் சோவியத் யூனியனும் யுகொஸ்லாவிய மீது அதிக அக்கறை காட்டி வந்தன. 

பொருளாதாரத்தை உதாசீனப்படுத்தியமையும் யுகொஸ்லாவியாவின் வீழ்ச்சிக்கு முக்கிய ஏதுவாக அமைந்தது. மேற்குலத்திடம் பெற்றுக்கொள்ளப்பட்ட அதிக கடன்தொகை மற்றும் சர்வதேச நாணய நிதியம் சுமத்திய அழுத்தங்கள் காரணமாக இந்த சர்ச்சை மேலும் தீவிரமடைந்தது.

பலம்பொருந்திய யுகொஸ்லாவிய கம்யூனிஸ்ட் கட்சி சுதந்திர பொருளாதார கொள்கைகளை அறிமுகப்படுத்தத் தொடங்கியது. இந்தப் புதிய பொருளாதாரக் கொள்கைகள் கம்யூனிஸ்ட் கட்சியை வெகுவாக பலவீனப்படுத்தியதுடன், தேசியவாதக் கொள்கைகள் கிளர்ச்சியடையக் காரணமாக அமைந்தது. நாட்டில் இனமுரண்பாட்டு பதற்றம் அதிகரித்தது.

 

(கடந்த பெப்ரவரி மாதம் நியூயோர்க்கின் ரைம்ஸ் சதுக்கத்தில் கொசோவோவின் சுதந்திரம் கொண்டாட்டப்பட்ட விதம்)
 
அமெரிக்கா திடீரென தனது அக்கறையை பிராந்தியத்தின் மீது அதிகமாக காட்டத் தொடங்கியது. சோவியத் ஒன்றியத்தின் காலத்தில் யுகொஸ்லாவிய மீது காட்டிய அதே சிரத்தையாக இது இருக்க முடியாது. 

யுகொஸ்லாவியாவின் வீழ்ச்சி அமெரிக்கா மற்றும் ஐரோப்பா உள்ளிட்ட மேற்குலக நாடுகளுக்கு இன்றியமையாத தேவையாக காணப்பட்டதாக வொஷிங்டனின் கொள்கை வகுப்பாளர்கள் கருத்து வெளியிட்டனர்.

பெல்கன் தீபகற்ப நாடுகளை அழுத்தங்களுக்கு உட்படுத்துவதன் மூலம் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் பல்வேறு தந்திரோபாய நன்மைகளை அடைய முடியும். இதற்கு யுகொஸ்லாவிய பிளவுபடுதல் மிகவும் இன்றியமையாதாகும். கொசோவோ விவகாரம் இதன் உச்ச கட்டமாக நோக்கப்படுகிறது.

அமெரிக்காவுக்கும், ஏனைய ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் வித்தியாசமான கோணத்தில் அமைந்துள்ளன. குறிப்பாக ஜேர்மனியுடனான தொடர்புகளை மேற்கோள் காட்டலாம். அமெரிக்காவின் தலையீடுகளையும் அழுத்தங்களையும் ஐரோப்பா ஒரு கட்டத்தில் வெறுத்து நிராகரித்தது.

எனினும், தந்திரோபாயமாக அமெரிக்காவுடன் ஐரோப்பிய நாடுகள் யுகொஸ்லாவிய விடயத்தில் கூட்டுச்சேர்ந்தன.

தென்கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் தங்களை நிலைப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் ஐரோப்பிய நாடுகளுக்கு காணப்பட்டது. குறிப்பாக ஜேர்மனி போன்ற நாடுகள் அமெரிக்காவுடன் இணைந்தும், தனித்தும் பால்கன் தீபகற்ப நாடுகளில் தாக்கம் செலுத்த முற்பட்டன.

யுகொஸ்லாவிய விவகாரத்தில் அமெரிக்காவின் தந்திரோபாய துணையாக ஜேர்மனி செயற்பட்டது. அமெரிக்காவும், ஜேர்மனியும் கொசோவோ விடுதலை இராணுவத்தினருக்கு இரகசிய இராணுவப் பயிற்சிகளையும், நிதியுதவிகளையும் வழங்கினர்.

யுகொஸ்லாவியாவை வெற்றிகரமாக பிளவுபடுத்தியதன் பின்னர் பிளவடைந்து சென்ற புதிய நாடுகளுடன் (சேர்பியா தவிர்ந்த) அமெரிக்காவும், ஜேர்மனியும் நெருங்கிய தொடர்புகளை பேணியது. 

பெல்கன் நாடுகளின் ஆபரணமாக கொசோவோ திகழ்கிறது. பொதுவாக பெல்கன் தீபகற்ப நாடுகள் அதிலும் குறிப்பாக கொசோவோ கருங்கடலின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த மையமாகவும், முக்கிய எரிசக்தி வளங்களைக் கொண்ட கஸ்பியன் கடலின் முக்கிய மையமாகவும் கொசோவோ காணப்படுகிறது.

எரிவாயு மற்றும் எண்ணெய் குழாய்கள் ரஸ்யாவினூடாக அமைக்கப்படவுள்ளது. இதன் போது கொசோவோ முக்கியமான மையமாகக் கருதப்படுகின்றது.

இவற்றைவிட, குறைந்தளவு பொருளாதார வளர்ச்சியுடைய கொசோவோவில் தங்கம் மற்றும் நிலக்கரி வளம் வெகுவாகக் காணப்படுகின்றது. இந்த சுதந்திர கொவோவோவின் வளங்கள் மோசமான வகையில் சுரண்டப்படுதனைத் தவிர்க்க முடியாது.

மேலும், கொசோவோ தொடர்பான கரிசனையில் ஒரு இராணுவ தந்திரோபாயப் பரிமாணமும் காணப்படுகின்றது. 

நேட்டோவை முன்னிலைப்படுத்திய அமெரிக்க இராணுவ நிலைகளை பல்கன் தீபகற்ப நாடுகளிலும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் நிறுவுவதன் மூலம்; ரஸ்யாவை கண்காணித்துக் கொள்வது வொஷிங்டனின் மற்றுமொரு உபாயமாகக் கருதப்படுகிறது.

ஒரு காலத்தில் நேட்டோ “பேச்சு மாத்திரமே செயல் இல்லை” என்று வர்ணிக்கப்பட்டது. எனினும் அண்மைக் காலங்களில் ஐரோப்பா தொடர்பான அமெரிக்க கரிசனைகளின் கடிவாளமாக நேட்டோ செயற்பட்டு வருகின்றது.

பல பாதுகாப்புத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. உதாரணமாக ஏவுகணை எதிர்ப்பு மையம், போலாந்திலும், ஸ்லோவானியாவிலும் அமைக்கப்பட்டுள்ள ரொக்கட் தளம் மற்றும் செக் குடியரசில் அமைக்கப்பட்டுள்ள ரேடார் மையம் என்பவற்றைக் குறிப்பிடலாம். 

அமெரிக்காவின் (நேட்டோவின்) மிகப் பெரிய இராணுவ மையங்களில் ஒன்றாக கொசோவோவில் அமைக்கப்பட்டுள்ள இராணுவப்படைத்தளம் கருதப்படுகிறது. சுமார் 955 ஏக்கர்களில் இந்த இராணுவப் படைத்தளம் அமைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கப் பாதுகாப்பு படையினரின் ஏழாயிரம் வீடுகள் கொசோவோவில் காணப்படுகின்றன. குவான்தமானோவைப் போன்று பயங்கரவாத சந்தேகநபர்களை விசாரணை செய்யும் ஒரு மையமாக கொசோவோ செயற்படுவதாக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

கொசோவோவின் எல்லைகளைப் பாதுகாக்கும் நோக்கில் எதிர்காலத்தில் அமெரிக்க, நேட்டோ பாதுப்பு படையினரின் துருப்புக்கள் மேலும் அதிகளவில் குவிக்கப்படக்கூடிய சாத்தியம் நிலவுகிறது.

வெறும் பெயரளவிலேயே கொசோவோ சுதந்திரம் அடைந்துள்ளது. அரசியல் - புவியியல் சதுரங்க ஆட்டத்தில் ஒரு பகடைக் காயாகவே கொசோவோவை பலம் பொருந்திய நாடுகள் பயன்படுத்தியுள்ளன.

உள்நாட்டு முரண்பாடுகள் வெளிநாட்டு தலையீடுகளுக்கு வழிகோலும். 
கொசோவோவிற்கும், இலங்கைக்கும் வழங்கக்கூடிய எளிமையான எடுத்துக்காட்டு இதுவன்றி வேறெதுவுமில்லை.
 

Post a comment

(The comment may need to be approved by Ootru.com. Until then, it won't appear on the entry. Thanks for waiting.)

ஊற்றில் அண்மையில் பிரசுரமானவை