ஹோலிப் பண்டிகை
சாகாவரத்தையுடைய காதல் வாழ்கையையும், குதூகலத்தையும் வர்ணங்களால் வெளிப்படுத்திக் கொண்டாடும் ஹோலிப் பண்டிகை
ஆக்கம்: துஷியந்தினி கனகசபாபதிப்பிள்ளை
இந்தியாவின் முதன்மையான பண்டிகைகளில், வர்ணங்களின் பண்டிகையான ஹோலிப் பண்டிகையும் ஒன்றாகும். குளிர்காலத்திலிருந்து வசந்தகாலத்திற்கான பருவ மாற்றத்தை இந்தப் பண்டிகை குறித்து நிற்கிறது. பல வர்ணக்கலவைகளை ஒருவர் மீது ஒருவர் பூசி மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்ளும் ரம்யமான பண்டிகையே ஹோலி என்றழைக்கப்படுகிறது.
வேம்பின் இலை, குங்குமம், மஞ்சள், வில்வ இலை மற்றும் மருத்துவ குணங்கள் செறிந்த பல மரபுவழியிலான இயற்கை பொருட்களைக் கொண்டு இந்த வர்ணங்கள் தயாரிக்கப்படுகின்றன.
[வர்ணங்களினால் எழுச்சி பெறும் ஹோலிப் பண்டிகை]
இந்த வர்ணப்பொடிகளை ஒருவருக்கொருவர் பூசி மகிழ்வதனூடாக மருத்துவ பலன்களை அடைய முடியும் என்ற நம்பிக்கை பரவலாகக் காணப்படுகிறது.
பிரகாசமான நிறங்கள் புத்துணர்ச்சியையும் சந்தோசமான வாழ்க்கையும் குறித்து நிற்பதாக மக்கள் மத்தியில் ஓர் ஐதீகம் நிலவியது. உண்மையில் இந்தியாவில் கொண்டாடப்படும் ஹொலிகா எனும் தொன்மைமிக்க பண்டிகையே ஹோலிப் பண்டிகையின் நதிமூலமாக குறிப்பிடப்படுகிறது.
வசந்தகாலத்தின் வருகையையும், காதல் பருவத்தினையும் கொண்டாடி களிப்படையக்கூடிய ஓர் அற்புத வழிமுறையாக ஹோலிப் பண்டிகை இந்தியாவில் பிரசித்தி பெற்று விளங்குகின்றது.
இந்த ஹோலிப் பண்டிகைக் கொண்டாட்டங்கள் தொடர்பாக அறிஞர்கள் பல கருத்துக்களை குறிப்பிடுகின்றனர். இவ்வாறு விதந்துரைக்கப்படும் பல கதைகளில் கிருஸ்ணபகவானிற்கும் ராதைக்கும் இடையிலான அமரத்துவ காதல் அந்யோன்யம் மிக முக்கியமான ஒன்றாகும்.
யசோதையின் சுட்டிக் குழந்தையான கிருஸ்ணர் தீராத விளையாட்டு பிள்ளையாகவும், புராணக் கதைகளின் தலைவனாகவும் போற்றப்படுகின்றார்.
சுட்டிக்குழந்தை கிருஸ்ணா ஏன் நான் மட்டும் கருமையாக இருக்கின்றேன்? ராதை மட்டும் அழகிய நிறத்தில் ஜொலிப்பதன் இரகசியம் என்ன என்று தனது செல்ல அன்னை யசோதாவிடம் கேட்கிறான். அதற்கு தாய் யாசோதா, “உனக்கு ராதையின் நிறம் மீது அவ்வளவு பொறாமை இருந்தால் அவள் மீது கடும் வர்ணங்களைப் பூசு அவ்வாறு பூசினால் அவளும் உன்னைப் போன்ற கருமையான நிறத்தில் காட்சியளிப்பாள் என்று பதிலளித்தார். கிருஸ்ண பகவான் ராதை மீது வர்ணங்ளை அள்ளி பூசினார்.
அன்று முதல் அனைத்து காதல் ஜோடிகளும் தங்களது துணைகளின் மீது நிறங்களைப் பூசி அன்பை அபரிமிதமாக வெளிப்படுத்தும் இந்த ஆனந்தக் கொண்டாட்டம் ஆரம்பமானது.
தமிழ் நாட்டில் காமதேவனுடைய உன்னத தியாகத்தை வியந்து பாராட்டும் வழிபாட்டு நிகழ்வாக ஹோலிப் பண்டிகை கருதப்படுகிறது.
ஹோலிப் பண்டிகை மூன்று வௌ;வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. காமன் பண்டிகை, காமவிலாஸ் மற்றும் காம தஹனம் என்ற மூன்று வேறுபட்ட பெயர்களில் அழைக்கப்படுகிறது.
தமிழ் நாட்டு மக்களிடையே சிவபெருமான் மற்றும் காமதேவன் ஆகிய கடவுளர் மீது அதீதமான நம்பிக்கை காணப்படுகிறது.
தனது பத்தினியின் மறைவினால் ஆத்திரமும், வேதனையுமடைந்த சிவபெருமான் கடும் தியானத்தை மேற்கொண்டார். இதனைப் பார்த்த மலைமகள் பார்வதி, சிவனை தனது கணவனாக அடைய வேண்டும் என கடும் தவத்தை மேற்கொண்டனர்.
சிவபெருமானின் உக்கிர நிலையை கட்டுப்படுத்தி சாந்தப்படுத்தும் நோக்கில் காமதேவனிடம் பார்வதி உதவி கோரினார். காமதேவன் காதல் கடவுள் அல்லவா? எப்படி மறுப்பார். சிவபெருமானின் கோபத்திற்கு ஆளாவது எவ்வளவு பாரதூரமானதென்பதை காமதேவன் நன்கு உணர்ந்திருந்த போதிலும், பார்வதி தேவிக்கு உதவி செய்வதாக வாக்குறுதியளித்தார்.
உக்கிர தியானத்தில் ஆழ்ந்திருந்த சிவபெருமானின் மீது, காமதேவன் காமக் கணையை தொடுத்தார். இதனால் கடும் சினங்கொண்ட சிவபெருமான் தனது மூன்றாவது கண்ணான நெற்றிக் கண்ணை திறந்து காமதேவனை எரித்து சாம்பலாக்கினார்.
எவ்வாறெனினும், காம பாணத்தின் லீலையினால் பரமசிவன் பார்வதி தேவியை தனது பத்தினியாக ஏற்றுக் கொண்டார்.
எனினும், கடவுள் காமதேவனின் மறைவினால் அவரது மனைவி ரதிதேவி பெரும் துயரத்தில் ஆழ்ந்தார். தனது சோகக் கதையை பரமசிவனிடம் ரதிதேவி முறையிட்டு, தனது கணவனை மீண்டும் உயிர்ப்பித்து தருமாறு இறைஞ்சி மன்றாடினார்.
இதனைக் கேட்ட சிவபெருமன் ரதிதேவி மீது கொண்ட கருணை காரணமாக காமதேவனுக்கு மீண்டும் உயிர்கொடுக்க ஒப்புக்கொண்டார்.
ரதிதேவியின் சொல்லொன்னா சோகங்களைச் சுமந்த காதல் சொட்டும் பாடல்களே இந்தக் காமன் பண்டிகையின் போது தமிழ் நாட்டில் பாடப்படுகின்றது.
தீக்காயங்களினால் பீடிக்கப்பட்ட காமதேவனுடைய உடம்பிற்கு மக்கள் சந்தனம் தடவுவதாக ஒரு ஐதீகமும் காணப்படுகின்றது.
எனவே இந்தப் பண்டிகை காமதேவனுக்காக கொண்டாடப்படும் ஒரு பண்டிகையாகவும், காதல் திருவிழாவாகவும் தமிழ் நாட்டில் கொண்டாடப்படுகிறது.
இந்த வர்ணஜாலப் பண்டிகை மிகுந்த மகிழ்ச்சியுடனும், அன்புடனும் வடஇந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது.
ஹோலிப் பண்டிகைத் தினமன்று வெள்ளை நிறத்திலான ஆடைகளே பொதுவாக அணியப்படும். கிராமிய பாடல்களும், நடனமும் இந்தக் காதல் பண்டிகையின் முக்கிய அங்கங்களாகும்.
இந்த வருடத்தில் மார்ச் மாதம் 22ம் திகதி ஹோலிப் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. இது குதூகலக் காதல் கொண்டாட்டக் காலம்.
கடந்த வருடம் மார்ச் மாதம் 4ம் திகதி இலங்கையின் தாஜ் சமுத்திரா ஹோட்டலில் இந்தக் ஹோலிக் கொண்டாட்டங்கள் விமரிசையாக கொண்டாடப்பட்டது.