ஊற்று

மாறுபட்ட மழைவீழ்ச்சி, வெள்ளம் என்பன நெல் விளைச்சலில் ஏற்படுத்தியுள்ள தாக்கம்

லங்கை மழைவீழ்ச்சிகளில் ஏற்பட்டுள்ள மாறுதல்களின் காரணமாக விவசாயிகள் காலம் தாழ்த்தி நாற்று நடுதலில் ஈடுபட்டனர். இதனால் நாட்டின் அரிசி விளைச்சல் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பிரதான போகமாகக் கருதப்படும் பெரும்போக செய்கைக்கான நெல் விதைப்பு நடவடிக்கைகளில் ஒக்ரோபர் மாத ஆரம்பத்தில் வழமையாக மேற்கொள்ளப்படும்.

எனினும், கடந்த இரண்டு தசாப்தங்களாக ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றங்களினால் குறிப்பாக பருவம் மாறிய மழைவீழ்ச்சி பெறுகையினால் ஒக்ரோபர் மாத இறுதி அல்லது அடுத்த மாதம் வரை நெல் விதைப்பிற்காக காத்திருக்க வேண்டியேற்பட்டுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளாக இந்த நிலைமையை நாம் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. மழை பொழியும் வரை விவசாயிகள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என விவசாயத் திணைக்களத்தின் விவசாய-காலநிலைப் பிரிவு தலைவர் கலாநிதி பி. புண்யவர்தன தெரிவித்தார்.

வழமையாக பெரும்போக அறுவடைகள் பெப்ரவரி மாதத்திலேயே மேற்கொள்ளப்படும். எனினும் தற்போது அது மார்ச் மாத நடுப்பகுதி அளவிலேயே மேற்கொள்ளப்படுகிறது.

இந்த வருடத்தில் வழமைக்கு மாறாக கடும் மழை பெய்தததனால் மார்ச் மாத நடுப்பகுதியில் கூட அறுவடை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது என கலாநிதி புண்யவர்தன மேலும் குறிப்பிட்டார்.

கடுமையான மழை 400,000 பேரை தாக்கியுள்ளது

கடந்த மார்ச் மாதம் 12ம் திகதி ஆரம்பித்த கடும் மழையினால் நாடு முழுவதிலும் உள்ள பத்து மாவட்டங்களைச் சேர்ந்த 400,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய அனர்த்த நிவாரண மையம் தெரிவித்துள்ளது.

சில பகுதிகளில் பெறப்பட்ட மழை வீழ்ச்சிப் பெறுதி வழமையான மழைவீழ்ச்சிப் பெறுதியைவிட 70 வீத அதிகரிப்பைக் காட்டியதாக வளிமண்டலவியல் திணைக்களப் பிரதிப் பணிப்பாளர் எஸ்.எச். காரியவசம் ஐ.ஆர்.ஐ.என். இற்குத் தெரிவித்தார்.

[திருகோணமலையில் விவசாயி ஒருவர்-படப்பிடிப்பு: அமாந்த பெரேரா]

அம்பாறை, மன்னார், மட்டக்களப்பு மற்றும் பொலன்னறுவை ஆகிய நெல் விளைச்சல் அதிகமாக சாகுபடியாகும் மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. இந்த கன மழையின் தாக்கத்தினால் குறிப்பிட்ட மாவட்டங்களின் பல பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கின.

வருடாந்தம் இலங்கை சுமார் 3.3 மில்லியன் மெற்றிக் தொன் அரிசி உற்பத்தி செய்வதாக தேசிய புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது.

எனினும், இந்த வருடம் பெய்த கடும் மழை மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாக மொத்த உற்பத்தியில் 2.5 வீதம் இழக்கப்பட்டுள்ளதாக விவசாய திணைக்களப் பிரதிப் பணிப்பாளரான சாந்த எமிட்டியாகொட சுட்டிக்காட்டினார்.

உள்நாட்டு மொத்த கேள்விக்கும், தேசிய நெல் உற்பத்திக்கும் இடையில் 10 வீதமான இடைவெளியொன்று பொதுவாகக் காணப்படுகிறது. எனினும், இம்முறை மழை வெள்ளத்தினால் ஏற்பட்ட பாதிப்பு இந்த இடைவெளியை 12.5 வீதமாக அதிகரிக்கும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

அரிசி விலை உயர்வு

அரிசிக்கான இந்த அதிக கேள்வி உள்நாட்டு சந்தையில் விலையேற்றம் ஏற்பட ஏதுவாக அமைந்ததுடன், தரத்திலும் வீழ்ச்சியை ஏற்படுத்தியது என எமிட்டியாகொட தெரிவித்தார்.

அடுத்த நெல் அறுவடைக்காக நெல் விதைகளை ஒதுக்க வேண்டியுள்ளது, இவ்வாறு விதை நெல்லுக்காக நெல் மணிகளை ஒதுக்கும் போது, அரசி விலையில் தாக்கங்கள் ஏற்படும்.

ஏற்கனவே, விவசாய திணைக்களம் சுமார் ஆறு மில்லியன் கிலோ கிராம் நெல் விதைகளை ஒதுக்கீடு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அதிக உள்நாட்டுக் கேள்வி மற்றும் உலக சந்தையில் உணவுப் பொருட்களுக்கான விலையேற்றம் என்பவற்றின் காரணமாக கடந்த வருடம் அரிசி விலை வெகுவாக உயர்வடைந்து காணப்பட்டது.

சில வகை அரிசிகள் 60 – 80 வீத விலை அதிகரிப்பை காட்டியுள்ளதாக புள்ளிவிபரத் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காலநிலை மாற்றம் தொடர்பான வரையறுக்கப்பட்ட அறிவு

இதேவேளை, காலநிலை மாற்றம் தொடர்பாக மேற்கொள்ளப்படும் விஞ்ஞான ஆய்வுகள் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே இருப்பது வருத்தமளிப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த சூழ்நிலை உச்சளவு உள்நாட்டு நெல் அறுவடையைப் பெற்றுக்கொள்வதில் தடையாக அமைந்துள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கடந்த சில ஆண்டுகளாக மழை வீழ்ச்சியில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக நெல் அறுவடையிலும் மாறுதல்கள் ஏற்பட்டுள்ளதாக உணவு மற்றும் விவசாய நிறுவன திட்ட இணைப்பதிகாரி நளின் முனசிங்க தெரிவித்தார்.

எனினும், ஒக்ரோபர் மாத அறுவடைகள் காலம் தாழ்த்தப்படுவதனூடாக விவசாயிகள் இதற்கு இசைவாக்கம் அடைந்துள்ளமையை புலப்படுத்துகிறது. அவர்களிடம் விஞ்ஞான அறிவு காணப்படவில்லை என்ற போதிலும் நடைமுறையில் ஏற்படும் மாற்றங்களை உணர்ந்து செயற்படுவதுவும் நெல் விதைப்பு காலம் தாழ்த்தப்படுவதற்கான ஒரு காரணியாகும் என அவர் குறிப்பிட்டார்.

பயிர்ச்செய்கை முறைமையை மாற்றுவதனைவிட வித்தியாசமான நெல் வகைகளை பயிர்செய்வது ஒரு வெற்றிகரமான திட்டமாக பரிந்துரைக்கப்படுகிறது.

அநேகமான நெல் வயல்கள் தாழ் நிலங்களில் காணப்படுகின்றன. வெள்ள நிலைமைகளுக்கு ஈடுகொடுக்கக்கூடிய நெல் வகைகளை பயிரிடுவதன் மூலம் இந்த நிலமையை சமாளிக்கலாம் என ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆய்வு மற்றும் பயி;ற்சி நிலைய ஆய்வாளர் பண்டா கிராகம தெரிவித்தார்.

மோசமான கால நிலை பற்றி எதிர்வுகூறப்பட்டால் இரண்டு வாரங்களுக்கு முன்னதாகவே முற்றாத கதிர்களை அறுவடை செய்ய முடியும். எனினும், இவ்வாறு அறுவடை செய்யப்படும் நெற் கதிர்கள் விரைவில் நுகரப்பட வேண்டும். இந்த நெல் நீண்டகாலத்திற்கு களஞ்சியப்படுத்தி வைக்க முடியாது என அவர் மேலும் தெரிவித்தார்.

[இது ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் ஓர் அங்கமாகிய ஒருங்கிணைக்கப்பட்ட பிராந்திய தகவல் வலையத்தின் (irinnews.org) செய்தி அறிக்கை: Variable rains and flooding impact on rice harvest இனது தமிழாக்கம்]

Post a comment

(The comment may need to be approved by Ootru.com. Until then, it won't appear on the entry. Thanks for waiting.)

ஊற்றில் அண்மையில் பிரசுரமானவை