விவசாயிளுக்கு உதவுவதன் மூலம் அனைவரையும் பாதுகாக்க முடியும்
அரிசி மற்றும் உணவுப் பொருள் விநியோக வீழ்ச்சி..... விவசாயிளுக்கு உதவுவதன் மூலம் அனைவரையும் பாதுகாக்க முடியும்..
க.தி.குமாரன்
உலகளாவிய ரீதியில் அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்களுக்கான விலை அதிகரித்துச் செல்கின்றது. கடந்த சில மாதங்களில் அரிசியின் விலை இரு மடங்காக அதிகரித்துள்ளது. அனேகமான மக்களின் பிரதான உணவுப் பொருளாக அரிசி காணப்படுகின்றமையால், மக்களின் வாழ்க்கைச் செலவும் மேலும் உயர்வடையக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
சில அரிசி வகைகளின் விலை கடந்த வருடத்தை விட 100 வீதம் அதிகரித்துள்ளதுடன், கடந்த மாதத்தில் மட்டும் 30 வீதம் உயர்வடைந்துள்ளது.
அண்மைக்காலமாக சடுதியான உயர்வுப் போக்கைக் காட்டிவரும் உணவுப் பொருட்களுக்கான விலையேற்றம் சர்வதேச உணவு உதவிகளை வழங்கும் நிறுவனங்களுக்கு பாரிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ஆசிய பிராந்தியம் முழுவதும் அரசியின் விலை உயர்வுபோக்கை காட்டிச் செல்கிறது. இந்த நிலைமை பிராந்தியத்தில் உள்ள வறிய மக்களுக்கான உதவித் திட்டங்களை மோசமாக பாதிக்கும்.
உணவுப் பொருட்களுக்கான விலையேற்றம், உலகம் முழுவதிலும் உள்ள 73 மில்லியன் மக்களுக்கான ஐக்கிய நாடுகளின் உணவு நிவாரணத் திட்டங்களுக்கு பாரிய அச்சுறுத்தலாக அமையக்கூடும் என உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது.
இந்த நிலைமை மிகவும் வறிய நாடுகளில் பாரதூரமான அதிர்வுகளை ஏற்படுத்தும் என அந்த அமைப்பினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உலக உணவுத் திட்டத்தின் 2008ம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டை மேலும் அரை பில்லியனால் அதிகரிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதன்படி ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்ட 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்கள் தற்போது 3.4 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்த்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே குறைபோசாக்குடைய ஆகாரங்களை உட்கொள்ளும் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் மந்த போஷாக்கினால் அல்லலுறக்கூடிய அபாயம் நிலவுவதாக உலக உணவுத் திட்டம் சுட்டிக்காட்டுகின்றது.
அரிசி மற்றும் உணவுப் பொருட்களுக்கான கேள்வி அதிகரித்து வருகின்றமை உலகம் முழுவதும் உணவுப் பற்றாக்குறை ஏற்பட ஏதுவாக அமைந்துள்ளது.
எனினும், சில நாடுகளில் காலநிலை மற்றும் உள்நாட்டு கலவரங்களின் காரணமாக அரசி உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
வடக்கு கிழக்கு வாழ் தமிழ் விவசாயிகளது பல நெல் வயல்களை, இலங்கை இராணுவத்தினர் அதிஉயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தி, விவசாய நடவடிக்கைகளை மட்டுப்படுத்தியுள்ளமையை இதற்கு மேற்கோளாகக் காட்டலாம்.
விவசாயிகள் சுதந்திரமாக விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு கடந்த இரண்டு தசாப்தங்களாக வாய்ப்புகள் மறுதலிக்கப்பட்டுள்ளன.
இலங்கையின் மழைவீழ்ச்சியில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக பல பிரதேசங்களில் அறுவடை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டின் மொத்த நெல் உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
காலநிலையினால் ஏற்படும் மாற்றங்களின் விளைவுகளை அடிமட்ட வறிய மக்களே தாங்கிக் கொள்ள நேரிடும் என சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவகத்தின் முன்னாள் தலைவரும், முன்னணி விவசாய ஆய்வாளருமான எம்.எஸ். சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
எனவே காலநிலை மாற்றங்களுக்கு எவ்வாறு முகங்கொடுக்க வேண்டும் என்பது பற்றிய அறிவு, காலநிலை மாற்ற முகாமைத்துவம் பற்றிய வழிப்புணர்வு என்பன குறித்து வறிய விவசாயிகளுக்கு தெளிவுபடுத்தப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வித்தியாசமான நெல் வகைகளை அறிமுகப்படுத்தல் மற்றும் நெற் பயிர்ச்செய்கை மேம்படுத்தல் என்பவற்றின் மூலமாக தனியார் மற்றும் அரசாங்கத் துறைகளது பங்களிப்பை ஊக்குவிக்க சர்வதேச நெல் ஆய்வு நிறுவகம்; நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.
தெற்காசிய மற்றும் சஹரன் - ஆபிரிக்க நாடுகளைச் சேர்ந்த 400,000 மேற்பட்ட விவசாயிகளுக்கு மாறுபட்ட நெல் பயிர்ச்செய்கை மற்றும் விவசாய தொழில்நுட்பங்களை ஊக்குவிக்கும் நோக்கில் பில் மற்றும் மிலின்டா கேட்ஸ் நிதியம் 19.9 மில்லியன் அமெரிக்க டொலர்களை சர்வதேச நெல் ஆய்வு நிறுவகத்திற்கு வழங்கியுள்ளது.
அடுத்து வரும் பத்தாண்டு காலப்பகுதியில் குறிப்பிட்ட விவசாயிகள், வழமையான விளைச்சலைக் காட்டிலும் 50வீத அதிகரிப்பை பெற்றுக்கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலக மனிதாபிமான சமூகங்கள் அரசசார்பற்ற நிறுவனங்களினூடாக விவசாயிகள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக அரசாங்கம் மற்றும் தனியார் துறையினரது ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன.
கைத்தொழில் மயமாக்கல் மற்றும் நகர மயமாக்கல் என்பனவே விவசாய நிலங்களைத் தாக்கும் மிகப் பாரிய அச்சுறுத்தல்களாக அடையாளங் காணப்பட்டுள்ளன.
தனிநபர்கள் மற்றும் நிபுணர்களினூடாக உணவு மற்றும் விவசாய அபிவிருத்தி நுட்பங்களை முன்னெடுப்பதன் மூலம் விசாயிகளும், விவசாய நிலங்களையும் ஒட்டு மொத்த சமூகத்தையும் பாதுகாக்க முடியும்.
உள்நாட்டு கலவரங்கள் விவசாயத்துறையை எங்கனம் பாதித்துள்ளது என்பது குறித்து சர்வதேச சமூகம் கவனம் செலுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
இலங்கையின் வடக்கு கிழக்குப் பகுதியில் உள்ள பசுமையான விவசாய விளைநிலங்கள் விவசாயிகளுக்கு தடை செய்யப்பட்ட பிரதேசமாக காணப்படுகின்றது. இந்த நிலைமைகள் குறித்து சர்வதேச சமூகத்தின் கவனம் திருப்பப்பட வேண்டும்.
இவ்வாறான நிலைமைகளில் அரிசி விலையேற்றம் தவிர்க்க முடியாத ஒன்றாக அமையும்.
நெல் வயல்களில் தற்போது நிலைகொண்டுள்ள பளுப்புநிற தலைக்கவசங்களை அந்தப் பிரதேசத்திலிருந்து அகற்றி மீண்டும் பச்சைப்பசேல் என நெற் கதிர்கள் அசைவதற்கு சர்வதேச மனிதாபிமான அமைப்புக்கள் விரைந்து செயற்பட வேண்டும்.