ஊற்று

ஜனாதிபதி பராக் ஒபாமாவிடம் மனித உரிமைகள் அமைப்புக்கள் வேண்டுதல்

சிறிலங்கா அரசின் இனப் படுகொலைகளை விசாரிக்க அனைத்துலக விசாரணை ஆணையம்: ஒபாமாவுக்கு மனித உரிமை அமைப்புக்கள் முறையீடு:

லங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் என்ற பெயரில் அப்பாவி தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டது குறித்து விசாரிக்க அனைத்துலக விசாரணை ஆணையத்தை ஏற்படுத்த வேண்டும் என்று அமெரிக்க அரச தலைவர் பராக் ஒபாமாவை 6 மனித உரிமை அமைப்புக்கள் வலியுறுத்தியுள்ளன.

 

  

 

இலங்கை முகாம்களில் வாழும் தமிழர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கும்படியும் அந்த அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

அனைத்துலக மன்னிப்புச் சபையின் அமெரிக்க செயல் இயக்குநர் லாறி கோக்ஸ்

த கார்டர் நிலையத்தின் மனித உரிமை பிரிவு இயக்குநர் கறீன் றையன்

சுதந்திர இல்லம் என்ற அமைப்பின் செயல் இயக்குநர் ஜெனிபர் வின்ட்சர்

அனைத்துலக மனித உரிமை குழுவின் தலைவர் றொபேர்ட் அர்சனால்ட்

மனித உரிமை மேம்பாட்டு மையத்தின் இயக்குநர் பெலிஸ் டி.கேர்

மனித உரிமைக்கான மருத்துவர்கள் அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி பிராங் டொனாக்கே

ஆகியோர் இது தொடர்பாக விரிவான மனு ஒன்றை அமெரிக்க அரச தலைவர் பராக் ஒபாமாவுக்கு அண்மையில் அனுப்பியுள்ளனர்.

அந்த மனுவின் விவரம்:

இலங்கையில் நடைபெற்ற போரில் இறுதிக் கட்டமான கடந்த டிசம்பர் மாதம் முதல் மே மாதம் வரை பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். மேலும் பல்லாயிரக்கணக்கானோர் காயமடைந்தனர்.

பெருமளவிலானோர் இடம்பெயரும் நிலை எற்பட்டது. இலங்கையில் போரை நிறுத்தும்படி பல்வேறு மனித உரிமை அமைப்புக்களும், நீங்கள் (ஒபாமா) உள்ளிட்ட பல்வேறு உலகத் தலைவர்களும் வலியுறுத்திய போதிலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் 20 ஆயிரத்திற்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக நம்பத்தகுந்த விபரங்களின் அடிப்படையில் லண்டனில் இருந்து வெளிவரும் 'த ரைம்ஸ்', 'லி மோன்டே' போன்ற நாளேடுகள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்க உறுதியான நடவடிக்கை எடுக்க அனைத்துலக சமுதாயம் தவறிவிட்டதால், எந்தவொரு நாடும் இறையாண்மை என்ற பெயரில் அதன் சொந்த மக்களையே படுகொலை செய்யும்போது, அதைத் தடுக்க உலக சமுதாயம் எதையும் செய்வதற்கில்லை என்ற எண்ணம் உலகம் முழுவதும் ஏற்பட்டிருக்கிறது.

இலங்கையில் போரில் பிழைத்த தமிழ் மக்களை பாதுகாக்கவும், தமிழ் மக்கள் மீது இனப்படுகொலையை நடத்தியவர்களுக்கு தண்டனை வழங்கவும் உலக சமுதாயத்தை திரட்டும் பொறுப்பை அமெரிக்கா ஏற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால், உலகில் உள்ள நாடுகள் விளைவுகளை பற்றி கவலைப்படாமல் தங்கள் நாட்டு மக்கள் மீதே அடக்குமுறைகளை ஏவிவிட ஊக்கமளிப்பதாக அமைந்துவிடும். அதனால்தான் இலங்கை இனப்பிரச்சினையில் நீங்கள் உடனடியாக நடவடிக்கை எடுப்பது மிகவும் முக்கியமாகிறது.

அகதிகள் முகாம்களில் அவதிகள்

இலங்கை போர்ப் பகுதியில் இருந்து வெளியேறிய மூன்று லட்சத்திற்கும் அதிகமான தமிழ் மக்கள் சிறிலங்கா அரசின் முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களுக்கு தடையில்லாமல் மனிதநேய உதவிகள் வழங்கப்பட்டால்தான் அவர்கள் வாழ்வதற்கும், இறப்பதற்கும் வேறுபாடு இருக்கும். ஆனால், அகதிகள் முகாம்களுக்குள் ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்புக்களும் தொண்டு நிறுவனங்களும் சென்று உதவிகளை வழங்க சிறிலங்கா அரசு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறது.

இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் விதிகளின்படி செயற்பட்டு வரும் பல்வேறு மனித உரிமைகளின் சார்பில் கடந்த மே 26 ஆம் நாள் அறிக்கை ஒன்றை வெளியிட்ட மனித உரிமை ஆர்வலர் மெக்தலினா செபுல்வேதா, இலங்கை போர்ப் பகுதியில் இருந்து வெளியேறிய மூன்று லட்சத்திற்கும் அதிகமான தமிழ் மக்களை பாதுகாப்புக் காரணங்களைக் காட்டி மூன்று மாதங்களுக்கும் மேலாக சிறிலங்கா அரசு அடைத்து வைத்திருக்கிறது.

இதனால் அவர்களை சிறிலங்கா அரசு கட்டாய சிறையில் அடைத்திருக்கிறதோ என்ற கவலை எழுகிறது. இவர்களில் பலர் இந்த முகாமுக்கு வருவதற்கு முன்பு போர்ப் பகுதியில் மிக மோசமான சூழலை எதிர்கொண்டு வந்தனர். இப்போதுள்ள முகாம்களிலும் ஏராளமான மக்கள் பட்டினியாலும், சத்துக் குறைவாலும் உயிரிழந்துள்ளனர் என்று கூறியிருந்தார்.

இலங்கை அகதிகள் முகாம்களில் தமிழ் மக்கள் கடத்தப்படுதல், கொடுமைப்படுத்தப்படுதல், படுகொலை செய்யப்படுதல், அவமதிக்கப்படுதல், துணை ஆயுதக்குழுக்களுக்கு தேர்வு செய்யப்படுதல், பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுதல் உள்ளிட்ட பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுவதாக அனைத்துலக மன்னிப்புச் சபை கூறியுள்ளது.

இலங்கை போர்ப் பகுதியில் 70 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரையிலான மக்களே உள்ளனர் என்று திரும்பத் திரும்ப கூறி உலக சமுதாயத்தை சிறிலங்கா அரசு ஏமாற்றி வந்தது. போர்ப் பகுதியில் இரண்டரை லட்சம் தமிழ் மக்கள் உள்ளனர் என்று ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்புக்கள் கூறிய போதிலும் அதை சிறிலங்கா அரசு மறுத்து வந்தது. ஆனால் இப்போது போர்ப் பகுதியில் மூன்று லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இருந்தது உறுதியாகி விட்டது.

அனைத்துலக விசாரணை ஆணையத்தை அமைக்க வேண்டியதற்கான தேவை

இலங்கையில் நடைபெற்ற போரின் போது அரசு படைகளும், விடுதலைப் புலிகளும் அனைத்துலக மனித நேய விதிகளை பலமுறை மீறியதற்கான ஆதாரங்களை மனித உரிமை அமைப்புக்கள் ஆவணப்படுத்தியுள்ளன.

சிறிலங்கா அரசு திரும்பத் திரும்ப மறுத்த போதிலும், அந்நாட்டின் படைகள் அடர்த்தியாக மக்கள் வாழும் பகுதிகள் மீது மீண்டும் மீண்டும் குண்டுகளை வீசித் தாக்கியதும், பாதுகாப்பு வலய பகுதிகளாக அறிவிக்கப்பட்ட இடங்களில் உள்ள 30-க்கும் அதிகமான மருத்துவமனைகளை தாக்கி அழித்ததும் உறுதியாகியிருக்கிறது.

விடுதலைப் புலிகளும் மக்களை மனிதக் கேடயங்களாக பயன்படுத்தியதன் மூலம் விதிகளை மீறிவிட்டனர். போர்ப் பகுதியில் சிங்களப் படைகளின் தாக்குதல் குறித்தும், பொதுமக்களின் இறப்பு குறித்தும் வெளியுலகங்களின் ஊடகங்களுக்கும், மனித உரிமை அமைப்புகளுக்கும் விரிவாக விளக்கிய மூன்று மருத்துவர்கள், சிறிலங்கா அரசால் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

நோயாளர்களுக்கு மருத்துவம் அளிக்கும் தங்களின் கடமையை செய்ததற்காக அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது மருத்துவ நடுநிலை தன்மையின் விதிகளை மீறிய செயலாகும்.

போர்ப் பகுதியில் உள்ள மக்களுக்கு சிறிலங்கா அரசு போதிய அளவு நிவாரண உதவிகளை அனுப்பாததும், உதவி அமைப்புகள் இடர் உதவிகளை வழங்க அனுமதி மறுத்ததும் அங்குள்ள மக்களின் நிலைமையை மேலும் மோசமாக்கிவிட்டது.

இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து சிறிலங்கா அரசு இதுவரை நடத்திய விசாரணைகளின் தரம் மிகவும் மோசமாக உள்ளது. இலங்கையில் தொடர்ந்து மனித உரிமை மீறல்கள் நடைபெற்று வருகின்றன.

பல்லாயிரக்கணக்கானோர் கட்டாயமாக கடத்தப்படுவது சட்டத்திற்கு எதிரான வகையில் கொல்லப்படுவது போன்றவை குறித்த வழக்குகள் மலை போல் குவிந்துள்ளன. தொடரும் பயங்கரங்கள் என்ற பெயரில் கடந்த 2008 ஆம் ஆண்டு மனித உரிமை கண்காணிப்பகம் வெளியிட்ட அறிக்கையில் இந்த உண்மைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதன் பிறகும் மனித உரிமை மீறல் தொடர்பாக இலங்கையில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிப்பதற்காக அரச தலைவரின் விசாரணை ஆணையம் என்பது போன்ற பல அமைப்புக்கள் கடந்த காலங்களில் அமைக்கப்பட்ட போதிலும் அதனால் பெரிய அளவில் பயன்கள் ஏற்படவில்லை.

எனவே இலங்கையில் அண்மையில் நடைபெற்ற போருடன் தொடர்புடைய போர்க் குற்றங்கள், சட்ட விரோத தடுப்புக்காவல் போன்ற குற்றங்கள் குறித்து விசாரிப்பதற்காக சுதந்திரமான அனைத்துலக விசாரணை ஆணையம் ஒன்று அமைக்கப்பட வேண்டியது அவசியமாகிறது.

எனவே அனைத்துலக விசாரணை ஆணையம் ஒன்றை அமைக்கும்படி உலக நாடுகளுக்கு நீங்கள் வெளிப்படையாக அழைப்பு விடுக்க வேண்டும். மேலும் அதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

இலங்கையில் போர் நடந்த பகுதிகள் மற்றும் அகதிகள் முகாம்களுக்கு செல்லவும் அங்குள்ள மக்களை சந்தித்துப் பேசவும் மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் ஊடகங்களுக்கு அனுமதி அளிப்பது உட்பட முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள தமிழர்களைப் பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் நீங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. [நன்றி: புதினம்]

Post a comment

(The comment may need to be approved by Ootru.com. Until then, it won't appear on the entry. Thanks for waiting.)

ஊற்றில் அண்மையில் பிரசுரமானவை