July 07, 2008

தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறை வேற்ற வேண்டும்

சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராக எதிர்வரும் 10 ஆம் நாள் மேற்கொள்ளப்படவிருக்கும் பாரிய பணிப்புறக்கணிப்புக்கு ஆதரவு தெரிவித்திருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இந்த பணிப்புறக்கணிப்பில் தமிழ் மக்களையும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளது.

இது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்துள்ள ஊடகச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஜூலை மாதம் 10 ஆந்; திகதி அனைத்துச் தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து நடத்தவிருக்கும் வேலை நிறுத்தமானது, ஏழைத் தொழிலாளர்களின், சாதாரண பொது மக்களின் விரக்தியை, வெறுப்பை, அவர்களது கஷ்டங்களைத், துன்பங்களை வெளிப்படுத்துவதற்கான ஒரு போராட்டமாகும். அந்த வகையில் சகல தொழிற் சங்கங்களும், எந்த வித வேறுபாடுமின்றி இதில் கலந்து கொள்ள வேண்டுமெனத் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு வேண்டுகோள் விடுவதுடன், தமிழ் மக்களின் முழுமையான ஆதரவையும், ஒத்துழைப்பையும் தெரிவித்துக் கொள்கின்றது. இலங்கை அரசின் பிழையான கொள்கைகள் எமது நாட்டை தோல்வி கண்ட நாடாக்கியுள்ளதுடன், ஏழைமக்களைப் பிச்சாபாத்திரம் ஏந்தும் நிலைக்கும் தள்ளியுள்ளது. எனவே இன, மத,பேதமில்லாமல், கட்சி வேறுபாடுகள் இல்லாமல், சகல தொழிற் சங்கங்களும் இந்த வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டு இதனை வெற்றியடையச் செய்ய வேண்டுமென தமிழ்த் தேசியக்கூட்டமைப்புக் கோருகின்றது.

அரசாங்கத்தால் நடத்தப்படும் யுத்தத்தின் பின்னணியில் அரசு தனது பல தவறுகளை மூடி மறைப்பதற்கு முயற்சிக்கின்றது. இந்த நாட்டில் நீண்ட காலமாக வேருன்றி வந்திருக்கும் தேசியப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அரசால் இற்றை வரையில் ஒரு நியாயமான தீர்வுத்திட்டம் முன் வைக்கப்படவில்லை. அரசால் ஆரம்பிக்கப்பட்ட நடவடிக்கைகளையே அரசு முறியடித்து, 1988 ஆம் ஆண்டு முன் வைக்கப்பட்டு அந்த நேரத்திலேயே தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட 13வது அரசியல் சாசனத்தை ஒரு தீர்வாக அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது. இதன் மூலம் ஒரு நியாயமான அரசியல் தீர்வை முன்வைப்பதற்கு அரசின் விருப்பமின்மை தெளிவாக எடுத்துக்;காட்டப்படுகின்றது. இக் காரணத்தின் நிமித்தமே அரசு தேசியப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இராணுவ நடவடிக்கையைக் கையாளுகின்றது. ஒரு நியாயமான அரசியல் தீர்வை முன் வைக்க வேண்டுமென நீண்ட காலமாகச் சர்வதேச சமூகம் விசேடமாக இந்தியா, அமெரிக்கா, ஜரோப்பிய ஓன்றியம், இணைத்தலைமை நாடுகள் போன்றவை வலியுறுத்தி வந்திருக்கின்றன. அவ்விதமான ஒரு நியாயமான தீர்வை முன் வைப்பதாக அரசாங்கத்தால் வாக்குறுதி; கொடுக்கப்பட்ட போதிலும் வாக்குறுதியை நிறை வேற்றமுடியாமல் அரசு சூழ்ச்சிகளில் ஈடுபட்டு, இராணுவத் தீர்வின் மீதே தனது முழு நம்பிக்கையை வைத்துச் செயற்படுகின்றது.

தமிழ் ஈழ விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாக அடக்கி ஒடுக்கினால் ஒரு நியாயமான அரசியல் தீர்வை முன் வைக்கும் பொறுப்பிலிருந்து தாம் தப்பித்துக் கொள்ளலாம் என்று அரசாங்கம் நினைக்கின்றது.

நியாயமான அரசியல் தீர்வின் மூலம் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியுமானால் யுத்தத்துக்காகத் தற்பொழுது செலவு செய்யப்படும் பாரிய தொகையை அரசு மக்களின் வேறு நியாயமான தேவைகளுக்காகப் பயன்படுத்த முடியும்.

யுத்தத்தை நடத்துவதனால் ஆயுதங்களைக் கொள்வனவு செய்வதில் நடைபெறும் பாரிய ஊழல்கள் மக்களுக்குத் தெரிந்த விடயமே. யுத்ததின் காரணமாக தமிழ், சிங்கள, முஸ்லிம், பொது மக்கள் கொல்லப்படுகிறார்கள். பல இளைஞர்கள், படையினரோ அல்லது இயக்கத்தினரோ கொல்லப்படுகிறார்கள். பொது மக்களின் சொத்துக்களுக்கு பாரிய இழப்புகள் ஏற்படுகின்றது. பல இலட்சக் கணக்கான மக்கள் குடிபெயர்ந்து அகதிகளாகப் பல விதமான கஷ்டங்களுக்கு உள்ளாக்கப்படுகின்றார்கள். இவற்றை எல்லாம் உணர்ந்து ஓர் அரசியல் தீர்வைக் கண்டு யுத்தத்தை நிறுத்தி யுத்தச் செலவினத்தை குறைக்க வேண்டியது அரசின் முதற் கடமை.

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலையேற்றம், அரிசிவிலையேற்றம் போன்றவை தான் இலங்கையில் ஏற்படும் விலையேற்றத்துக்கும் காரணம் என்று அரசு கூறுகின்றது. சர்வதேச சந்தையில் விலை அதிகரிப்பு என்பது உண்மை தான்.ஆனால,; இலங்கையில் எரிபொருள் விலை 20ரூபா 30ரூபாவால் அதிகரிக்கின்ற போதிலும், உதாரணமாக இந்தியாவில் எரிபொருள் ஆக 2ரூபாவால் மட்டுமே அதிகரிக்கின்றது.

எமது நாட்டில் ஏற்படும் விலையுயர்வு வளர்ச்சியடைந்த நாடுகளில் நிலவும் விலைக்குச் சமனாகவே உள்ளது. அவ்வாறான நாடுகளில் தொழிலாளிகள் பெறும் சம்பளம் மிக உயர்ந்தாகவே உள்ளது. எமது நாட்டில் ஒரு தொழிலாளி பெறும் சம்பளம் அவனது உணவுக்கே போதுமானதாகவில்லை.

மேலும, அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்கள் ஊடகவியலாளர்களைக் கட்டுப்படுத்தல், மற்றும் ஜனநாயக விரோதச் செயல்கள் போன்றவை அரசினால் நடத்தப்படும் யுத்தத்தின் பெயராலேயே மேற் கொள்ளப்படுகின்றது. இச் செயல்கள் மக்களின் சுதந்திரத்தைப் பறித்துப் பீதியும், பயமும் நிறைந்த ஒரு சூழலில் வாழ்வதற்கு மக்களை நிர்ப்பந்திக்கின்றது.

சர்வதேச சந்தையில் விலையேற்றத்தைச் சாட்டாகக் கூறும் அரசு நூற்றுக்கும் மேற்பட்ட அமைச்சர்களையும், பிரதி அமைச்சர்களையும் ,அளவற்ற ஜனாதிபதி ஆலோசகர்களையும் நியமனம் செய்து, இவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளுக்காகப் மக்களின் பெருந்தொகைப்பணத்தை வீண் விரயம் செய்கின்றது என்பதை அரசு இன்னும் உணரவில்லை.

எனவே, மேற்குறிப்பிட்ட தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறை வேற்ற வேண்டுமென வலியுறுத்துகின்றோம்.

மாவை.எஸ்.சேனாதிராஜா
பொதுச் செயலாளர்

இரா.சம்பந்தன்
பாராளுமன்ற குழுத்தலைவர்

இலங்கைத் தமிழ் அரசுக்கட்சி
(தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு)

July 05, 2008

காணொளி: அடிப்படை தண்ணீர் வசதியின்மையினால் கொத்மலை ரிவர்சைட் தோட்டத் தொழிலாளர் அவஸ்தை

June 27, 2008

இடம்பெயர்ந்த மக்களின் இன்னல்களைப் புதிய அரசியல் கட்சி தீர்த்து வைக்குமா?

துஷியந்தினி கனகசபாபதிப்பிள்ளை

“வீதி வசதியில்லை; நீர் வசதியில்லை; வீட்டு வசதியில்லை. போக்குவரத்து வசதி சீராக இல்லாமையினால், பிள்ளைகள் ஒழுங்காகப் பாடசாலை செல்ல முடியாமல் உள்ளது. எங்களுக்கு எந்தவித வசதியுமில்லை. வந்த மாதிரியே இன்னமும் பல கஷ்டங்களுக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்”.என்று தனது அன்றாடக் கஷ்டங்களைப் பகிர்ந்து கொண்டார் ஏ.ஷாகுலா. கணவணையிழந்த இவர் தனது பாடசாலை செல்லும் இரண்டு பிள்ளைகளுடன் புத்தளத்தில் உள்ள சோல்ற்றன் 2 என்னும் அகதி முகாமில் கடந்த 18 வருடங்களாக வாழ்ந்து வருகின்றார்.

[புத்தளம் இடம் பெயர்ந்த மக்கள் படத் தொகுப்பு]

புத்தளம் வடமேல் மாகாணத்தில் அமைந்துள்ள ஓர் கரையோரப் பிரதேசமாகும். புத்தளம் பிரதேசச் செயலகத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, புத்தளம் மாவட்டத்தின் மொத்தச் சனத்தொகை 8,14, 000 மக்கள். இதில் 5,85,000 சிங்கள மக்களும், 1,49,000 முஸ்லிம் மக்களும், 80,000 தமிழ் மக்களும் அடங்குவர். தற்பொழுது 75,000 உள்ளுர் இடம்பெயர்ந்த மக்கள் இங்கு வாழ்ந்து வருகின்றனர்.

முஸ்லிம் மக்கள் 1990 ஈம் ஆண்டு அக்டோபர் மாதம், தமது சொந்த இடங்களிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினால் வெளியேற்றப்பட்டனர். யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் வசித்து வந்த இந்த மக்களை இரண்டு மணித்தியாலங்களுக்குள் தத்தமது இடங்களை விட்டு வெளியேறுமாறு கோரப்பட்டது. இவர்கள் தம்முடன் குறிப்பிட்டளவான பணத்தையும், உடைமைகளையும் எடுத்துச் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டது. இவ்வாறு தமது வீடு, வாசல்களை விட்டு வெளியேறிய மக்கள் படகு, பஸ், ட்ரக்டர் மூலமாகப் புத்தளம் மாவட்டத்தை வந்தடைந்தனர். பல்வேறு நிறுவனங்கள் அங்கு பல அகதி முகாம்களை நிறுவி, அவர்களை அங்கு குடியேற்றினர்.

இவர்களில் பலர் இன்னமும் அகதி முகாம்களிலேயே பல இன்னல்களைச் சந்தித்த வண்ணம் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்த பலர் தில்லையடியில் வாழ்கின்றனர். இப் பகுதி “லிற்றில் ஜவ்னா” அல்லது “சிறிய யாழ்ப்பாணம்” என்றழைக்கப்படுகின்றது.

மேலும் யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்த மக்களுக்கும் மன்னாரிலிருந்து இடம்பெயர்ந்த மக்களுக்கும் இடையே வழங்கப்படும் உதவிகளில் பாரபட்சம் காட்டப்படுவதாக யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்தவர்கள் கூறுகின்றனர். அத்துடன் தாங்கள் யாரும் கவனிப்பாரற்ற ஓர் சமூகமாக இருப்பதாகவும் இவர்கள் கருதுகின்றனர்.

“நாங்கள் பல கஷ்டங்களுடன் இன்னமும் அகதி முகாம்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். எங்களுக்கு உலர் உணவு ஒழுங்காக் கிடைப்பதில்லை; தொழில் வாய்ப்புக்களைப் பெறுவதில் பல சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. எமக்கு 1,630ஃஸ்ரீ ரூபாவிற்கு சமமான உலர் உணவு 18 வருடங்களுக்கு முன்னர் வழங்கப்பட்டது. இன்றும் அதே தொகைக்குரிய உலர் உணவே வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. நாங்கள் ஓர் ஒழுங்கான அரசியல் தலைமைத்துவமின்றி “அரசியல் அநாதைகளாக” வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்” என்று சிறிய பலசரக்கு கடையொன்றைத் தனது சிறிய குடிசைக்கு முன்னால் நடத்தி வரும் எஸ். எச். மன்சூர் கூறினார்.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள், தமக்கு இதுவரை சரியான தலைமைத்துவம் அமையவில்லை என்று ஆதங்கப்படுகின்றனர். இதன் அடிப்படையில் அண்மையில் உருவான புதிய அரசியல் கட்சியே மக்கள் மறுமலர்ச்சி முன்னணி. யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 21 உறுப்பினர்கள் கடந்த மாதம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட இந்தக்கட்சியில் உறுப்பினர்களாக உள்ளனர்.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகளின் அவசியத்தை அகதி முகாம்களில் வாழுகின்ற மக்கள் உணர்கின்றனர். ஏனைய பிரதேசங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகள் பல வாக்குறுதிகளை வழங்கித் தம்மைப் பல தடமைகள் ஏமாற்றி விட்டதாக இந்த மக்கள் கருதுகின்றனர்.

“எமது மக்கள் பல உரிமைகளை இழந்து விட்டனர். அவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தி, அவர்கள் இழந்த உரிமைகளை மீண்டும் பெற்றுக் கொடுக்க விரும்புகின்றோம். அத்துடன் அவர்களை மீண்டும் அவர்களின் சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்தி, அவர்களின் கஷ்டங்களை நிவர்த்தி செய்வதற்கான முயற்சிகளையும் செய்யவுள்ளோம். புதிய அரசியல் கட்சியொன்றை நிறுவுவதற்கு மேற்கூறியவை காரணமாகும். இவ்வாறானதொரு கட்சியைப் 10 அல்லது 15 வருடங்களுக்கு முன்னரே ஆரம்பித்திருக்க வேண்டும்” என்று மக்கள் மறுமலர்ச்சி முன்னணியின் தலைவரான எம்.எம்.குத்தூஸ் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி போன்ற மாவட்டங்களிலிருந்து சுமார் 20,000 மக்கள் வெளியேற்றப்பட்டனர். இவர்களின் எண்ணிக்கையானது தற்பொழுது இரட்டிப்பாகியுள்ளது. இவர்களின் தேவைகளும் இரட்டிப்பாகியுள்ளன. தற்பொழுது சுமார் 15,000 யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் தம்மை வாக்காளர் இடாப்பில் பதிவு செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இவ்வாறானதொரு புதிய அரசியல் கட்சி அவசியம் எனப் புத்தளத்தைப் பிறப்பிடமாகவும், வாழ்விடமாகவும் கொண்டுள்ள சிலர் கூறுகின்றனர். பெரும்பான்மைக் கட்சிகள் சேர்ந்து போட்டியிடுவதால் பல தீமைகள் ஏற்படுவதாகக் கருதப்படுகின்றது.

“பெரும்பான்மைக் கட்சிகளுடன் சேர்ந்து சிறுபான்மைக் கட்சிகள் தேர்தலில் போட்டியிடும் போது, அந்தச் சிறுபான்மைக் கட்சியினருக்கு பல அநீதிகள் இழைக்கப்படுகின்றன. இதனைக் கருத்திற் கொள்ளும் போது இவ்வாறு உள்@ரில் இடம்பெயர்ந்த மக்களுக்கென ஒரு கட்சியை ஆரம்பிப்பது சிறந்தது” என்றார் புத்தளம் பெரிய பள்ளிவாசலின் பிரதம தர்மகர்த்தாவான எஸ். ஆர். எம். முஸம்மில்.

“எனக்கு மீண்டும் யாழ்ப்பாணம் சென்று வாழ்வதற்கு விருப்பம். அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட புதிய கட்சியினர் இதற்கான ஏற்பாடுகளைச் செய்து தருவார்கள் என்றால், நான் மீண்டும் யாழ்ப்பாணம் செல்வதற்கு விரும்புகின்றேன்” என எம். நதீரா கூறினார்.

இவ்வாறு அகதி முகாம்களில் அல்லற்படும் மக்களின் அன்றாட அடிப்படைத் தேவைகளையாவது, புதிய அரசியல் கட்சி பூர்த்தி செய்யும் என்பது இன்றும் அகதி முகாம்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற பலரதும் நம்பிக்கையாகும்.

நேர்காணல் ஒலிப்பதிவு: துஷியந்தினி கனகசபாபதிப்பிள்ளை ~
புத்தளம், இடம்பெயர்ந்த மக்களுடன்:

May 21, 2008

ஜே.பி. ஜெயரட்னம்: சிங்கப்பூரின் முதுபெரும் அரசியல்வாதி

புதிய கட்சியொன்றின் மூலம் சிங்கப்பூர் பாராளுமன்றத்தில் அதிர்வுகளை ஏற்படுத்துவதற்கான மற்றுமொரு முயற்சி

புதிய கட்சியொன்றை ஆரம்பிப்பதென்பது ஓர் காலம் கடந்த முயற்சியாகவே தோன்றும். எனினும் திரு. ஜே.பி. ஜெயரட்னத்தின் அரசியல் வாழ்வில் இதுவோர் முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது.

சிங்கப்பூர் அரசியல் வரலாற்றின் அழையா விருந்தாளியாகவும், அரசியல் விவகாரங்களிலிருந்து விலகியிருக்க மறுதலிக்கும் ஆர்வமிக்கதோர் அரசியல்வாதியாகவுமே ஜெயரட்னம் நோக்கப்படுகின்றார்.

[ஜே.பி. ஜெயரட்னம்]

ஆறு வருட இடைவெளிக்குப் பின்னர் கடந்த மாதம் மீண்டும் செயற்பாட்டு அரசியலில் ஜெயரட்னம் களமிறங்கினார். இந்த சிரேஸ்ட வயோதிப அரசியல்வாதி மீண்டுமொருமுறை அசைக்க முடியாத சிங்கப்பூர் அரசியல் நிறுவனத்தில் அதிர்வுகளை ஏற்படுத்தும் பகீரத பிரயத்தனத்தில் ஈடுபட்டுள்ளார்.

“நாங்கள் இப்போதுதான் ஆரம்பித்துள்ளோம்” என தனது புதிய கட்சி தொடக்க விழாவில் அவர் தெரிவித்தார். சிறிய ஊடகவியலாளர் மாநாடொன்றில் கலந்து கொண்டு சீர்திருத்த கட்சி ஆரம்பம் பற்றி சமீபத்தில் அவர் தெளிவுபடுத்தினார்.

82 வயதான முதியவர் அலுவலகத்திற்கு சென்று வருவதென்பது வழமைக்கு மாறான நிலைமையாகத்தான் நோக்கப்பட வேண்டும்.

1971ம் ஆண்டிலிருந்து இவ்வாறான அரசியல் பணிகளை ஜெயரட்னம் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றார்.

எனினும், தனது அரசியல் பயணத்தை தடுப்பதற்கான வாய்ப்புக்களை எவருக்கும் திரு.ஜெயரட்னம் வழங்கவில்லை. ஆளுமைத் திறமையும், கொள்கைப் பிடிப்பும் இறைவனால் அவருக்கு வழங்கப்பட்ட கொடைகளாகும்.

கடந்த ஆண்டில் ஜெயரட்னம் பாரிய நிதி சிக்கல்களை எதிர்நோக்கினார். 2001ம் ஆண்டு சிங்கப்பூர் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு அவதூறு ஏற்படுத்திய குற்றத்திற்காக பெருமளவிலான நட்டஈட்டுத் தொகையை செலுத்த நேரிட்டது.

மேலும், நீதிமன்றத்திற்கு செல்ல தடை விதிக்கப்பட்டதுடன், இரண்டாவது தடவையாக பாராளுமன்றத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.

தமது சில அரசியல் கூற்றுக்களின் மூலம் அவதூறு இழைக்கப்பட்டதாக சுமத்தப்பட்ட முறைப்பாடுகளின் எண்ணிக்கை எண்ணிலடங்காதவை என ஜெயரட்னம் குறிப்பிட்டார்.

சிங்கப்பூரின் அரசாங்கத்திற்கு எதிராக குரல்கொடுக்கும் உரிமை எமக்கு மறுக்கப்பட்டுள்ளது என அவர் ஊடகவியலாளர் மாநாட்டில் வலியுறுத்தினார்.

தமது கண்களை அகல விரித்து, பொக்கை வாயில் காணப்படும் மூன்று பற்களுடன் மிக நமட்டுச் சிரிப்பொன்றை உதிர்த்த வண்ணம் நாட்டை நாம் பாதூக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

எமது மக்களுக்கு சுதந்திரம் கிடைக்கப் பெற வேண்டும், அதிகாரங்கள் மக்களின் கைகளுக்குச் சென்று சேர வேண்டும் என்பதே எனது அழுத்தமான கருத்து என அவர் மேலும் குறிப்பிட்டார்.

நடைமுறைச் சாத்தியமற்ற காலம் கடந்த முயற்சியாகவே அவரது முயற்சி நோக்கப்படுகிறது. எனினும் 10 பேர் அவரது கட்சியில் இணைந்து கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். ஏனையோர் வலுவான ஆளும் கட்சிக்கு எதிராக குரல்கொடுக்க தயக்கம் காட்டுகின்றனர்.

அவரது இலட்சியத்திற்காகவோ அல்லது புதிய கட்சியின் ஆரம்ப விழா காரணமாகவோ ஊடகவியலாளர்கள் குழுமவில்லை. உண்மையில் ஜெயரட்னம் என்ற அரசியல்வாதியின் ஆற்றல் மிக்க அனுபவ ஆளுமையே ஊடகவியலாளர்கள் ஈர்க்கப்பட்டமைக்கான பிரதான ஏதுவாகும்.

அரசாங்கத்திற்கு எதிரான அவரது தோல்விகள் மற்றும் விடா முயற்சியான போராட்டங்களுக்கு மத்தியில் சிங்கப்பூர் பொருளாதாரம் தன்னிறைவு பாதையில் ஸ்திரமான வெற்றியை பதிவு செய்தது.

கடந்த 42 ஆண்டுகால வரலாற்றில் 4.5 மில்லியன் மக்கள் முதல் பிரதமரின் கனவை நனவாக்கியுள்ளனர். மூன்றாம் மண்டல நாடுகளின் சொர்க்கபுரியாக சிங்கப்பூர் அமைய வேண்டும் என அந்நாட்டின் முதல் பிரதமர் லீ க்வான் யூ தெரிவித்திருந்தார்.

அநேகமான மக்கள் சிவில் சுதந்திரம் மற்றும் பேச்சு சுதந்திரம் தொடர்பான கட்டுப்பாடுகளை ஏற்றுக்கொள்கின்றனர். தமது பாதுகாப்பு மற்றும் நல்வாழ்விற்கான விலையாகவே பேச்சு சுதந்திரத்தை கருதுகின்றனர். ஜெயரட்னத்தைப் போன்ற சிலர் அடிப்படை மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என சிலாகிக்கின்றனர்.

ஜெயரட்னம் தொடர்பாக கலந்துரையாடிய போது, “நாங்கள் சற்று குறுகிய உள்ளம் படைத்தவர்கள்” என பெயர் குறிப்பிட விரும்பாத 16 வயது மாணவி ஒருவர் தெரிவித்தார். நாங்கள் பட்டம் பெற்றுக் கொள்வதற்கும், ஒரு தொழிலை பெற்றுக் கொள்வதற்குமே அதிக சிரத்தை காட்டுகின்றோம். அரசியல் பற்றி சிந்திக்கவில்லை, அது எங்களது கலாச்சாரமும் அல்ல என அவர் மேலும் குறிப்பிட்டார்.

நாங்கள் எங்களது கல்வியை தொடருவதில் அதிக கவனம் செலுத்துகின்றோம் என அவர் தெரிவித்தார்.

எவ்வாறெனினும், திரு.ஜெயரட்னத்திற்கு ஆதரவு கிடைக்கப் பெறுகிறதோ அல்லது ஆசனமொன்றை வகிக்கின்றாரா என்பதைவிட எதிர்த்தரப்பு ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற கொள்கையை அவர் பிரதிபலிக்கின்றார்.

எனினும், சிங்கப்பூரை பொருத்தமட்டில் மிக சொற்பளவிலான பங்கையே எதிர்க்கட்சியினால் வகிக்க முடியும் என்பது வெளிப்படையான உண்மையாக காணப்படுகின்றது.

சிங்கப்பூர் சுதந்திரமடைந்து 16 ஆண்டுகள் வரை முதல் பிரதமர் லீயின் ஏகபோக ஆட்சி உரிமையே நிலவியது எனக் கூறின் அது பிழையாகாது. 1965ம் ஆண்டு சுதந்திரமடைந்தது முதல் 1981ம் ஆண்டு வரை பிரதமர் லீயின் மக்கள் செயற்கட்சி தொடர்ச்சியாக ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியிருந்தது.

பாராளுமன்ற ஆசனமொன்றை பெற்றுக் கொள்வதற்காக ஜெயரட்னம் 6 தடவைகள் போட்டியிட வேண்டிய நிலை ஏற்பட்டது. இறுதியில் விசேட தேர்தல் ஒன்றில் ஜெயரட்னம் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டார்.

பாராளுமன்றத்தில் அதிகமாக குரல்கொடுக்கும் எதிர்க்கட்சி உறுப்பினராக ஜெயரட்னம் திகழ்ந்தார்.

பிரித்தானிய சட்டக்கல்லூரியில் கல்வி பயிலும் காலத்தில் அவரது துனைவியாரான மார்கரட்டை சந்தித்து கரம்பிடித்தார். ஜெயரட்னம் தேர்தலில் வெற்றிபெறுவதற்கு முன்னார் மார்கரட் மார்பக புற்று நோயினால் உயிரிழந்தார்.

தனது வெற்றிக்காக அரும்பாடுபட்ட தனது துணைவியார் வெற்றி பெறும் தருவாயில் இந்த மண்ணைவிட்டு நீங்கியிருந்தமை ஜெயரட்னத்தை ஆழமாக பாதித்தது.

திரு. ஜெயரட்னத்திற்கும் பாராளுமன்றத்திற்கும் இடையிலான உறவு அவ்வளவு ஆரோக்கியமானதாக எப்போதும் அயைமவில்லை. அநேக சந்தர்ப்பங்களில் அவரை வெளியேற்றுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. தனித்து நின்று மீண்டும் மீண்டும் பாராளுமன்றத்திற்குள் பிரவேசிக்க அவர் எத்தனித்தார்.

1986ம் ஆண்டு முதல் தடவையாக தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவி ஜெயரட்னம் இழந்தார். கட்சியின் கணக்கு விபரங்கள் தொடர்பாக போலியான தகவல்களை அவையில் சமர்த்த குற்றத்திற்காக ஒரு மாத காலச் சிறைத் தண்டனையும், அபாரதமும் விதிக்கப்பட்டது.

எனினும், இதனை ஓர் அரசியல் சூழ்ச்சித் திட்டம் என அவர் குறிப்பிடுகின்றார்.

அதன் பின்னர் நடைபெற்ற ஐந்து பொதுத் தேர்தல்களில் ஒரு தேர்தலில் மாத்திரம் போட்டியிடுவதற்கு அவருக்கு சட்ட ரீதியாக அனுமதி வழங்கப்பட்டது.

1997ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்டார். அந்தத் தேர்தலிலும் அவரால் வெற்றி பெற முடியவில்லை. எனினும், சிங்கப்பூர் தேர்தல் சட்டத்தின்படி சிறந்த தோல்வியாளர் என்ற அடிப்படையில் அவருக்கு ஆசனமொன்று கிடைக்கப் பெற்றது.

முன்னாள் பிரதமர் கோ சொக் தொங்கிற்கு எதிரான அவதூறு குற்றச்சாட்டுக்காக தண்டிக்கப்படும் வரை திரு. ஜெயரட்னம் அந்த பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வகித்தார்.

2011ம் ஆண்டில் அடுத்த பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் நான் போட்டியிடுவேன் என மிகவும் உறுதியான குரலில் அழுத்தமாக திரு. ஜெயரட்னம் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.

“எனக்கு 82 வயதாகிறது, இன்னமும் நான் ஆரோக்கியமாக இருக்கிறேன், என்னால் தேர்தலில் போட்டியிட முடியும்” என நம்பிக்கையுடன் அவர் குறிப்பிட்டார்.

சிங்கப்பூரின் மக்கள் செயற்கட்சி அபரிமிதமான வெற்றிகளை பெற்றுக்கொண்ட ஓர் கட்சியாக அடையாளப்படுத்த முடியும். எனினும், தனிப்பட்ட அரசியல் திறமைகளுக்கு எவ்வித முக்கியத்துவமும் கட்சியினால் வழங்கப்படவில்லை.

திரு. லீயின் சுவடுகளை பின்பற்றிச் செல்வதே கட்சியின் தாரக மந்திரமாக இன்றுவரை நீடித்து வருகின்றது என அவர் சுட்டிக்காட்டினார்.

ஆசன எண்ணிக்கைப் பற்றிய கவலை எங்களுக்கு இல்லை, ஆளும் கட்சிக்கு எதிரான மாற்றுக் கொள்கையையுடைய குழுக்கள் இருக்க வேண்டும் என்பதே பிரதான கருதுகோளாக அமைந்துள்ளது என அவர் தெரிவித்தார்.

சிங்கப்பூரில் ஏன் வலுவான எதிர்க்கட்சியொன்று இல்லை என்று சில காலங்களுக்கு முன்னர் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

வலுவான எதிர்கட்சியொன்றை உருவாக்க நானும் முயற்சித்தேன் எனினும் அது சாத்தியப்படவில்லை என ஜெயரட்னம் தெரிவித்தார்.

திரு.ஜெயரட்னம் அவர்களின் மாற்றுக் கொள்கைகளின் காரணமாக எதிர்க்கட்சிகளுக்கான கதவு திறக்கப்பட்டது. நான்கு உறுப்பினர்களே உச்சபட்ச எதிர்க்கட்சி உறுப்பினர்களாக சிங்கப்பூர் பாராளுமன்ற வரலாற்றில் செயற்பட்டுள்ளனர்.

84 உறுப்பினர்களைக் கொண்ட தற்போதைய பாராளுமன்றத்தில் இரண்டு உறுப்பினர்கள் மாத்திரமே எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். அவர்களும் ஆளுங்கட்சியுடன் நட்புறவான கொள்கைகளை கடைபிடிக்கின்றனர்.

திரு. ஜெயரட்னத்தின் செயற்பாடுகள் பிரதமர் லீயை வெகுவாக பாதித்திருந்தது. பிரதமர் லீ மற்றும் ஜெயரட்னம் ஆகியோரது உறவு உலகின் மிக நீண்ட அரசியல் முறுகல்களில் ஒன்றென அரசாங்கத்திற்கு சார்பான பத்திரிகையொன்று அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தது.

கவனயீனமே ஜெயரட்னம் அவர்களின் பிரதான பலவீனம் என தனது வாழ்க்கை சரிதத்தில் பிரதமர் லீ க்வான் யூ குறிப்பிட்டுள்ளார்.

அநேகமான சந்தர்ப்பங்களில் அவரது உரைகள் தயாரற்ற நிலையில் ஒப்புவிக்கப்படுகின்றன என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

புள்ளிவிபரங்கள் அல்லது தகவல்கள் குறித்து எவரேனும் ஜெயரட்னத்திடம் சவால் விடுத்தால் அவர் நிலைகுலைந்து விடுவார் என லீ குறிப்பிட்டுள்ளார்.

பிரபலமடைய வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக சிறிய விடயங்களைக்கூட விசுவரூபமாக்க ஜெயரட்னம் சற்றும் தயங்குவதில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் மத்தியில் புகழுடன் திகழ வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக போலியான சர்ச்சைகளை உருவாக்கியுள்ளார், ஏனைய சில நாடுகளில் உள்ள அதிருப்தியாளர்களைப் போன்றே ஜெயரட்னமும் செயற்பாடுகின்றார் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

ஒருதலைப்பட்சமான அரசியல் செயற்பாடுகளினூடாக தனது கருத்துக்களை பலவந்தமாக திணிப்பதற்கு ஜெயரட்னம் முனைவதாக முன்னாள் பிரதமர் லீ தமது வாழ்க்கை சரிதத்தில் தெரிவித்துள்ளார்.

அவருடனான போட்டி ஆச்சரியப்படும் வகையில் சுவாரஸ்யமாக அமைந்திருந்தென பிரதமர் ஓர் நேர்காணலின் போது தெரிவித்துள்ளார்.

இலங்கை வம்சாவளியும், அங்கிலிக்கன் கிறிஸ்தவருமான ஜொஸ்வா பென்ஜமின் ஜெயரட்னம் 1926ம் ஆண்டு தற்போது மலேசியாவாக பிளவுபட்டிருக்கும் பகுதியில் பிறந்தார்.

பிரித்தானியாவின் லண்டன் சட்டக் கல்லூரியில், 1951ம் ஆண்டு சட்டமாணி பட்டத்தைப் பெற்றுக் கொண்டார்.

அவரது புதல்வரான பிலிப் தந்தையின் பாத சுவடுகளைப் பின்பற்றி சட்ட வல்லுனராக பரிணமித்துள்ளார். சிங்கப்பூர் சட்டப் பேரவையின் தலைவராக பிலிப் செயற்படுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரது மற்றைய புதல்வர் கெனத், லண்டனில் பொருளியல் வல்லுனராக கடமையாற்றுகின்றார். நிதி சிக்கல் ஏற்பட்டிருந்த சந்தர்ப்பங்களில் இரண்டு புதல்வர்களும் பாரியளவு நிதியுதவியை தமக்கு வழங்கியதாக அவர் குறிப்பிட்டார்.

பிரித்தானியாவில் சட்டக் கல்வியை முடித்துக் கொண்டு சிங்கப்பூர் திரும்பிய ஜெயரட்னம் துரித கதியில் வளர்ச்சியடைந்தார். நீதவான், மாவட்ட நீதவான், சட்ட ஆலோசகர், உயர் நீதிமன்ற பதிவாளர் மற்றும் இரண்டாம் நிலை நீதிமன்றங்களில் தலைவர் உள்ளிட்ட மிக முக்கியமான உயர் பதவிகளை வகித்தார்.

திரு.ஜெயரட்னம் 1963ம் ஆண்டு தனது 37 ஆவது வயதில் அரச சட்டத்துறையிலிருந்து பதவி விலகி தனியார் துறையில் பணியாற்ற ஆரம்பித்தார். தொழில் தொடர்பாக ஏற்பட்ட விரக்தியே அரச துறையிலிருந்து பதவி விலகுவதற்கான பிரதான காரணம் என அவர் குறிப்பிட்டிருந்தார்.

1971ம் ஆண்டு முதல் தடவையாக பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டார். அவர் போட்டியிட்ட அநேக சந்தர்ப்பங்களில் தோல்வியைத் தழுவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கையின் மெய்யான பெறுமதி குறித்த மக்களின் சிந்தனைகளை சீர்திருத்துவதே எனது முதன்மை நோக்கம் என அவர் ஊடகவியலாளர் மாநாட்டில் குறிப்பிட்டார்.

“ஏன் நாம் இங்கு இருக்கிறோம்?”, “என்ன நோக்கத்திற்காக நாம் இங்கு இருக்கின்றோம்? என அவரது கருத்துக்களுக்கு உடன்படாத மக்களிடம் அவர் இந்த ஊடகவியலாளர் மாநாட்டின் போது சில கேள்விகளை எழுப்பினார்

மாற்றுக் கருத்துக்களுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்ற உன்னத கொள்கையை மக்கள் மனதில் விதைபதற்காக, இந்த வயதிலும் ஜெயரட்னம் எத்தனிக்கும் பாங்கு பாராட்டுக்குரியதெனக் கூறின் அது மிகைப்படாது.

[நியு யோர்க் ரைம்ஸ் பத்திரிகையில் செத் மெய்டன் எழுதிய கட்டுரை, ஊற்ரு. கொம் இற்காக தமிழாக்கம் செய்யப்பட்டது]

May 11, 2008

கண்ணிவெடி அபாய இழப்புக்களை தவிர்ப்பதற்கான விழிப்புணர்வு

துஷியந்தினி கனகசபாபதிப்பிள்ளை

ண்ணிவெடி அபாய இழப்புக்களை தவிர்ப்பதற்கான விழிப்புணர்வு மிகவும் இன்றியமையாததாகும்.

நிலக்கண்ணிவெடிகளைத் தடை செய்வதற்கான சர்வதேசப் பிரசாரத்திற்கு 1997ம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது. சுமார் 80 நாடுகள் நிலக்கண்ணிவெடி பாதிப்பினால் அல்லலுறுவதாகவும், மேலும் இந்த நிலைமை குறித்து மதிப்பீடு செய்ய முடியாத பல நாடுகள் காணப்படுவதாகவும் சர்வதேச நிலக்கண்ணிவெடி அமைப்பு தெரிவிக்கின்றது.

[தாளையடி-வடமராட்சி கிழக்கில் கண்ணி வெடிகள் அகற்றும் பணி-ஏப்ரல் 2005 இல்]

153 நாடுகள் நிலக்கண்ணிவெடி தடை செய்யப்பட வேண்டும் என்ற உடன்படிக்கையில் கைச்சாத்திட்டன. எனினும் 40 நாடுகள் நிலக்கண்ணிவெடி தடுப்பு தொடர்பான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவில்லை.

வருடாந்தம் 15,000 பேருக்கு மேல் நிலக்கண்ணிவெடிகளினால் கொல்லப்பட்டும், காயமடைந்தும் வேதனையுறுகின்றனர்.

1990களின் ஆரம்ப கட்டத்தில் 25,000 பேருக்கும் அதிகமானோர் கண்ணிவெடித் தாக்குதல்களினால் கொல்லப்பட்டோ அல்லது காயமடைந்தோ இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

160 மில்லியனுக்கும் அதிகமான நிலக்கண்ணிவெடிகள் உலகம் முழுவதும் புதைக்கப்பட்டுள்ளதாக அண்மைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

2006 ஆண்டு ஏப்ரல் மாதம் 4ம் திகதி ஐக்கிய நாடுகளின் நிலக்கண்ணிவெடி தடுப்பு தினம் முதல் முதலாக அனுஷ்டிக்கப்பட்டது.

2008ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4ம் திகதி மூன்றாவது தடவையாகவும் உலகம் பூராவும் இந்த தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.

“உலகில் உள்ள 80 நாடுகளைச் சேர்ந்த மில்லியன் கணக்கான பொதுமக்கள் இன்னமும் நிலக்கண்ணிவெடி மற்றும் யுத்த எச்சங்களினால் ஏற்படக் கூடிய பாதிப்புக்கள் தொடர்பான பீதியில் பீடிக்கப்பட்டுள்ளனர்” என ஐக்கிய நாடுகள் அமைப்பின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பான விழிப்புணர்வு தினமாக ஏப்ரல் 4ம் திகதி பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

“இவர்கள் ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் மனித உயிர்கள் மீது அச்சுறுத்தல் விடுகின்றனர்”. “ இந்த மக்களுடைய அன்றாட வாழ்வாதாரங்கள் சிதிலமடைந்துள்ளன” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நிலக்கண்ணிவெடிகளின் மூலம் நிலம், பாதை மற்றும் பொதுச் சேவைகளை பெற்றுக் கொள்வதில் பல்வேறு தடைகளை ஏற்படுத்தியுள்ளதாக செயலாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.

நேபாள மக்கள் கண்ணிவெடிகளினால் மோசமான வகையில் பாதிக்கப்பட்டுள்ளனர் என நேபாளத்திற்கான ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதி இயன் மார்டீன் தெரிவித்துள்ளார்.

விரிவான வகையில் விழிப்புணர்வூட்டப்பட வேண்டும் எனவும், போர் எச்சங்களினால் உயிர்ச் சேதங்களோ அல்லது உடல் ஊனங்களோ ஏற்படாதிருக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இம்முறை ஐக்கிய நாடுகளின் கண்ணிவெடி பாதுகாப்பு தினம் ஏப்ரல் 4ம் திகதி இலங்கையில் அனுஷ்டிக்கப்பட்டது.

இலங்கையின் பல பாகங்களிலும் நிலக்கண்ணிவெடி தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. நிலக்கண்ணிவெடி மீட்புப் பணிகள் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றன.

கிழக்கில் வாகரை மற்றும் அதனை அண்டிய கிராமங்களில் கண்ணிவெடி மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த வருடம் இந்தப் பிரதேசங்களுக்கான விஜயத்தின் போது இந்த பிரதேசங்களில் நிலக்கண்ணிவெடிகளினால் ஏற்படக்கூடிய அபாயம் புலனாகியிருந்தது.

உலகளாவிய ரீதியில் நிலக்கண்ணிவெடி அச்சுறுத்தல்கள்

ஒவ்வொரு 30 நிமிடத்திற்குள் ஒருவர் நிலக்கண்ணிவெடியின் மீது கால் பதிப்பதன் மூலம் ஒரு குடும்பம் பாதிப்படைகின்றது. பாரிய வெடிப்பு அல்லது சிறுவர் உயிரிழப்பு அல்லது கள ஊழியர்கள் காயமடைதல்கள் இடம்பெறுகின்றன. இதன் மூலம் பாதிக்கப்பட்டவரின் முழுக் குடும்பமே துயரத்திற்கு உள்ளாகின்றது என ஒரு இலங்கை என்ற நிறுவனம் தெரிவிக்கின்றது.

ஒரு இலங்கை நிறுவனம் பின்வரும் தகவல்களைத் தெரிவிக்கின்றது:

ஒரு நிலக்கண்ணிவெடியை புதைப்பதற்கு 3 முதல் 10 அமெரிக்க டொலர்கள் வரை செலவாகின்றது. எனினும், நிலக்கண்ணிவெடியை அகற்றுவதற்கு 1000 அமெரிக்க டொலர் வரை செலவாகின்றது

அணு, இரசாயன மற்றும் உயிரி ஆயுத பாவனையினால் கொல்லப்பட்டோரின் எண்ணிக்கையைவிட அதிக எண்ணிக்கையிலான உயிர்களை நிலக்கண்ணிவெடிகள் காவுகொண்டுள்ளன.

வருடாந்தம் 15,000 மேற்பட்டோர் நிலக்கண்ணிவெடிகளினால் பாதிப்புறுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஒரு வாரத்திற்கு 288 பேரும், நாளொன்றுக்கு 41 பேரும், ஒரு மணித்தியாலத்தில் 2 பேரும் நிலக்கண்ணிவெடியின் கோரப்பிடியில் சிக்குவதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

70 வீதத்திற்கும் அதிகமான சிவிலியன்களே நிலக்கண்ணிவெடிகளினால் பாதிக்கப்படுகின்றனர். இதில் மூன்றில் ஒரு பகுதியினர் சிறுவர்கள் எனவும்; 50 வீதத்திற்கு அதிகமானோர் உயிரிழக்கின்றனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

உலகம் முழுவதும் 240 மில்லியனுக்கும் மேற்பட்ட இந்த ஆட்கொல்லி நிலக்கண்ணிவெடிகள் 100 நாடுகளில் புதைக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் நிலக்கண்ணி வெடிகளினால் ஏற்பட்டுள்ள பாதிப்பு

பசுமையான விவசாய நிலங்கள், நகரங்கள், வீதிகள், நீர் நிலைகள், மற்றும் கால்நடை வளங்கள் செறிவாக காணப்படும் பிரதேசங்களில் நிலக்கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலக்கண்ணிவெடிகளினால் நாட்டின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகள் மிக மோசமான வகையில் பாதிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக யாழ்ப்பாணம் மற்றும் வன்னிப் பகுதிகளில் துரதிஷ்டவசமாக மிகச் செழுமையான விவசாய நிலங்கள் மற்றும் சன நெரிசல் மிக்க பகுதிகளில் நிலக்கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டுள்ளன.

யாழ் தீபகற்பத்தின் விவசாய நிலங்கள் மற்றும் வீதிகளில் சுமார் 700,000ற்கும் மேற்பட்ட நிலக்கண்ணிவெடிகளை பாதுகாப்பு படையினரும், தமிழீழ விடுதலைப் புலிகளும் புதைத்திருப்பதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஒஸ்ரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

1999ம் ஆண்டு 25,000 நிலக்கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருப்பதாக அரசாங்கம் மதிப்பீடு செய்திருந்தது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான ஆட்கொல்லி நிலக்கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருக்கலாம் என தமிழீழ விடுதலைப் புலிகள் மதிப்பீடு செய்துள்ளனர்.

2002ம் ஆண்டு அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் போர் நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திரடப்பட்டதனைத் தொடர்ந்து பாரிய நிலக்கண்ணிவெடியகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக நடைபெற்று வரும் யுத்தத்தின் காரணமாக புதைக்கப்பட்ட 1.5 மில்லியன் நிலக்கண்ணிவெடிகளும், ஏனைய வெடிபொருட்களும் வடக்கு கிழக்கைச் சேர்ந்த 10 மாவட்டங்களில் அகற்றப்பட்டன.

நிலக்கண்ணிவெடி விழிப்புணர்வு மற்றும் தடுப்பு தினத்தின் மூலமாக பிராந்தியத்தில் நிலக்கண்ணிவெடிகளினூடாக ஏற்படக் கூடிய பாதிப்புக்கள் தொடர்பாக மீண்டும் தெளிவுபடுத்தப்பட வேண்டும்.

யுத்த அனர்த்தம் உக்கிரமடைந்தைத் தொடர்ந்து நிலக்கண்ணிவெடியினால் ஏற்படக்கூடிய அனர்த்த வீதமும் உயர்வடைந்துள்ளது.

நிலக்கண்ணிவெடி தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் அதிக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டியது இன்றியமையாத ஒன்றாகக் காணப்படுகிறது.

April 19, 2008

மாறுபட்ட மழைவீழ்ச்சி, வெள்ளம் என்பன நெல் விளைச்சலில் ஏற்படுத்தியுள்ள தாக்கம்

லங்கை மழைவீழ்ச்சிகளில் ஏற்பட்டுள்ள மாறுதல்களின் காரணமாக விவசாயிகள் காலம் தாழ்த்தி நாற்று நடுதலில் ஈடுபட்டனர். இதனால் நாட்டின் அரிசி விளைச்சல் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பிரதான போகமாகக் கருதப்படும் பெரும்போக செய்கைக்கான நெல் விதைப்பு நடவடிக்கைகளில் ஒக்ரோபர் மாத ஆரம்பத்தில் வழமையாக மேற்கொள்ளப்படும்.

எனினும், கடந்த இரண்டு தசாப்தங்களாக ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றங்களினால் குறிப்பாக பருவம் மாறிய மழைவீழ்ச்சி பெறுகையினால் ஒக்ரோபர் மாத இறுதி அல்லது அடுத்த மாதம் வரை நெல் விதைப்பிற்காக காத்திருக்க வேண்டியேற்பட்டுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளாக இந்த நிலைமையை நாம் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. மழை பொழியும் வரை விவசாயிகள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என விவசாயத் திணைக்களத்தின் விவசாய-காலநிலைப் பிரிவு தலைவர் கலாநிதி பி. புண்யவர்தன தெரிவித்தார்.

வழமையாக பெரும்போக அறுவடைகள் பெப்ரவரி மாதத்திலேயே மேற்கொள்ளப்படும். எனினும் தற்போது அது மார்ச் மாத நடுப்பகுதி அளவிலேயே மேற்கொள்ளப்படுகிறது.

இந்த வருடத்தில் வழமைக்கு மாறாக கடும் மழை பெய்தததனால் மார்ச் மாத நடுப்பகுதியில் கூட அறுவடை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது என கலாநிதி புண்யவர்தன மேலும் குறிப்பிட்டார்.

கடுமையான மழை 400,000 பேரை தாக்கியுள்ளது

கடந்த மார்ச் மாதம் 12ம் திகதி ஆரம்பித்த கடும் மழையினால் நாடு முழுவதிலும் உள்ள பத்து மாவட்டங்களைச் சேர்ந்த 400,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய அனர்த்த நிவாரண மையம் தெரிவித்துள்ளது.

சில பகுதிகளில் பெறப்பட்ட மழை வீழ்ச்சிப் பெறுதி வழமையான மழைவீழ்ச்சிப் பெறுதியைவிட 70 வீத அதிகரிப்பைக் காட்டியதாக வளிமண்டலவியல் திணைக்களப் பிரதிப் பணிப்பாளர் எஸ்.எச். காரியவசம் ஐ.ஆர்.ஐ.என். இற்குத் தெரிவித்தார்.

[திருகோணமலையில் விவசாயி ஒருவர்-படப்பிடிப்பு: அமாந்த பெரேரா]

அம்பாறை, மன்னார், மட்டக்களப்பு மற்றும் பொலன்னறுவை ஆகிய நெல் விளைச்சல் அதிகமாக சாகுபடியாகும் மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. இந்த கன மழையின் தாக்கத்தினால் குறிப்பிட்ட மாவட்டங்களின் பல பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கின.

வருடாந்தம் இலங்கை சுமார் 3.3 மில்லியன் மெற்றிக் தொன் அரிசி உற்பத்தி செய்வதாக தேசிய புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது.

எனினும், இந்த வருடம் பெய்த கடும் மழை மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாக மொத்த உற்பத்தியில் 2.5 வீதம் இழக்கப்பட்டுள்ளதாக விவசாய திணைக்களப் பிரதிப் பணிப்பாளரான சாந்த எமிட்டியாகொட சுட்டிக்காட்டினார்.

உள்நாட்டு மொத்த கேள்விக்கும், தேசிய நெல் உற்பத்திக்கும் இடையில் 10 வீதமான இடைவெளியொன்று பொதுவாகக் காணப்படுகிறது. எனினும், இம்முறை மழை வெள்ளத்தினால் ஏற்பட்ட பாதிப்பு இந்த இடைவெளியை 12.5 வீதமாக அதிகரிக்கும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

அரிசி விலை உயர்வு

அரிசிக்கான இந்த அதிக கேள்வி உள்நாட்டு சந்தையில் விலையேற்றம் ஏற்பட ஏதுவாக அமைந்ததுடன், தரத்திலும் வீழ்ச்சியை ஏற்படுத்தியது என எமிட்டியாகொட தெரிவித்தார்.

அடுத்த நெல் அறுவடைக்காக நெல் விதைகளை ஒதுக்க வேண்டியுள்ளது, இவ்வாறு விதை நெல்லுக்காக நெல் மணிகளை ஒதுக்கும் போது, அரசி விலையில் தாக்கங்கள் ஏற்படும்.

ஏற்கனவே, விவசாய திணைக்களம் சுமார் ஆறு மில்லியன் கிலோ கிராம் நெல் விதைகளை ஒதுக்கீடு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அதிக உள்நாட்டுக் கேள்வி மற்றும் உலக சந்தையில் உணவுப் பொருட்களுக்கான விலையேற்றம் என்பவற்றின் காரணமாக கடந்த வருடம் அரிசி விலை வெகுவாக உயர்வடைந்து காணப்பட்டது.

சில வகை அரிசிகள் 60 – 80 வீத விலை அதிகரிப்பை காட்டியுள்ளதாக புள்ளிவிபரத் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காலநிலை மாற்றம் தொடர்பான வரையறுக்கப்பட்ட அறிவு

இதேவேளை, காலநிலை மாற்றம் தொடர்பாக மேற்கொள்ளப்படும் விஞ்ஞான ஆய்வுகள் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே இருப்பது வருத்தமளிப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த சூழ்நிலை உச்சளவு உள்நாட்டு நெல் அறுவடையைப் பெற்றுக்கொள்வதில் தடையாக அமைந்துள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கடந்த சில ஆண்டுகளாக மழை வீழ்ச்சியில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக நெல் அறுவடையிலும் மாறுதல்கள் ஏற்பட்டுள்ளதாக உணவு மற்றும் விவசாய நிறுவன திட்ட இணைப்பதிகாரி நளின் முனசிங்க தெரிவித்தார்.

எனினும், ஒக்ரோபர் மாத அறுவடைகள் காலம் தாழ்த்தப்படுவதனூடாக விவசாயிகள் இதற்கு இசைவாக்கம் அடைந்துள்ளமையை புலப்படுத்துகிறது. அவர்களிடம் விஞ்ஞான அறிவு காணப்படவில்லை என்ற போதிலும் நடைமுறையில் ஏற்படும் மாற்றங்களை உணர்ந்து செயற்படுவதுவும் நெல் விதைப்பு காலம் தாழ்த்தப்படுவதற்கான ஒரு காரணியாகும் என அவர் குறிப்பிட்டார்.

பயிர்ச்செய்கை முறைமையை மாற்றுவதனைவிட வித்தியாசமான நெல் வகைகளை பயிர்செய்வது ஒரு வெற்றிகரமான திட்டமாக பரிந்துரைக்கப்படுகிறது.

அநேகமான நெல் வயல்கள் தாழ் நிலங்களில் காணப்படுகின்றன. வெள்ள நிலைமைகளுக்கு ஈடுகொடுக்கக்கூடிய நெல் வகைகளை பயிரிடுவதன் மூலம் இந்த நிலமையை சமாளிக்கலாம் என ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆய்வு மற்றும் பயி;ற்சி நிலைய ஆய்வாளர் பண்டா கிராகம தெரிவித்தார்.

மோசமான கால நிலை பற்றி எதிர்வுகூறப்பட்டால் இரண்டு வாரங்களுக்கு முன்னதாகவே முற்றாத கதிர்களை அறுவடை செய்ய முடியும். எனினும், இவ்வாறு அறுவடை செய்யப்படும் நெற் கதிர்கள் விரைவில் நுகரப்பட வேண்டும். இந்த நெல் நீண்டகாலத்திற்கு களஞ்சியப்படுத்தி வைக்க முடியாது என அவர் மேலும் தெரிவித்தார்.

[இது ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் ஓர் அங்கமாகிய ஒருங்கிணைக்கப்பட்ட பிராந்திய தகவல் வலையத்தின் (irinnews.org) செய்தி அறிக்கை: Variable rains and flooding impact on rice harvest இனது தமிழாக்கம்]

April 17, 2008

விவசாயிளுக்கு உதவுவதன் மூலம் அனைவரையும் பாதுகாக்க முடியும்

அரிசி மற்றும் உணவுப் பொருள் விநியோக வீழ்ச்சி..... விவசாயிளுக்கு உதவுவதன் மூலம் அனைவரையும் பாதுகாக்க முடியும்..

க.தி.குமாரன்

லகளாவிய ரீதியில் அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்களுக்கான விலை அதிகரித்துச் செல்கின்றது. கடந்த சில மாதங்களில் அரிசியின் விலை இரு மடங்காக அதிகரித்துள்ளது. அனேகமான மக்களின் பிரதான உணவுப் பொருளாக அரிசி காணப்படுகின்றமையால், மக்களின் வாழ்க்கைச் செலவும் மேலும் உயர்வடையக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

சில அரிசி வகைகளின் விலை கடந்த வருடத்தை விட 100 வீதம் அதிகரித்துள்ளதுடன், கடந்த மாதத்தில் மட்டும் 30 வீதம் உயர்வடைந்துள்ளது.

அண்மைக்காலமாக சடுதியான உயர்வுப் போக்கைக் காட்டிவரும் உணவுப் பொருட்களுக்கான விலையேற்றம் சர்வதேச உணவு உதவிகளை வழங்கும் நிறுவனங்களுக்கு பாரிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ஆசிய பிராந்தியம் முழுவதும் அரசியின் விலை உயர்வுபோக்கை காட்டிச் செல்கிறது. இந்த நிலைமை பிராந்தியத்தில் உள்ள வறிய மக்களுக்கான உதவித் திட்டங்களை மோசமாக பாதிக்கும்.

உணவுப் பொருட்களுக்கான விலையேற்றம், உலகம் முழுவதிலும் உள்ள 73 மில்லியன் மக்களுக்கான ஐக்கிய நாடுகளின் உணவு நிவாரணத் திட்டங்களுக்கு பாரிய அச்சுறுத்தலாக அமையக்கூடும் என உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது.

இந்த நிலைமை மிகவும் வறிய நாடுகளில் பாரதூரமான அதிர்வுகளை ஏற்படுத்தும் என அந்த அமைப்பினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உலக உணவுத் திட்டத்தின் 2008ம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டை மேலும் அரை பில்லியனால் அதிகரிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதன்படி ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்ட 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்கள் தற்போது 3.4 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்த்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே குறைபோசாக்குடைய ஆகாரங்களை உட்கொள்ளும் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் மந்த போஷாக்கினால் அல்லலுறக்கூடிய அபாயம் நிலவுவதாக உலக உணவுத் திட்டம் சுட்டிக்காட்டுகின்றது.

அரிசி மற்றும் உணவுப் பொருட்களுக்கான கேள்வி அதிகரித்து வருகின்றமை உலகம் முழுவதும் உணவுப் பற்றாக்குறை ஏற்பட ஏதுவாக அமைந்துள்ளது.

எனினும், சில நாடுகளில் காலநிலை மற்றும் உள்நாட்டு கலவரங்களின் காரணமாக அரசி உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கு வாழ் தமிழ் விவசாயிகளது பல நெல் வயல்களை, இலங்கை இராணுவத்தினர் அதிஉயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தி, விவசாய நடவடிக்கைகளை மட்டுப்படுத்தியுள்ளமையை இதற்கு மேற்கோளாகக் காட்டலாம்.

விவசாயிகள் சுதந்திரமாக விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு கடந்த இரண்டு தசாப்தங்களாக வாய்ப்புகள் மறுதலிக்கப்பட்டுள்ளன.

இலங்கையின் மழைவீழ்ச்சியில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக பல பிரதேசங்களில் அறுவடை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டின் மொத்த நெல் உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

காலநிலையினால் ஏற்படும் மாற்றங்களின் விளைவுகளை அடிமட்ட வறிய மக்களே தாங்கிக் கொள்ள நேரிடும் என சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவகத்தின் முன்னாள் தலைவரும், முன்னணி விவசாய ஆய்வாளருமான எம்.எஸ். சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

எனவே காலநிலை மாற்றங்களுக்கு எவ்வாறு முகங்கொடுக்க வேண்டும் என்பது பற்றிய அறிவு, காலநிலை மாற்ற முகாமைத்துவம் பற்றிய வழிப்புணர்வு என்பன குறித்து வறிய விவசாயிகளுக்கு தெளிவுபடுத்தப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வித்தியாசமான நெல் வகைகளை அறிமுகப்படுத்தல் மற்றும் நெற் பயிர்ச்செய்கை மேம்படுத்தல் என்பவற்றின் மூலமாக தனியார் மற்றும் அரசாங்கத் துறைகளது பங்களிப்பை ஊக்குவிக்க சர்வதேச நெல் ஆய்வு நிறுவகம்; நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

தெற்காசிய மற்றும் சஹரன் - ஆபிரிக்க நாடுகளைச் சேர்ந்த 400,000 மேற்பட்ட விவசாயிகளுக்கு மாறுபட்ட நெல் பயிர்ச்செய்கை மற்றும் விவசாய தொழில்நுட்பங்களை ஊக்குவிக்கும் நோக்கில் பில் மற்றும் மிலின்டா கேட்ஸ் நிதியம் 19.9 மில்லியன் அமெரிக்க டொலர்களை சர்வதேச நெல் ஆய்வு நிறுவகத்திற்கு வழங்கியுள்ளது.

அடுத்து வரும் பத்தாண்டு காலப்பகுதியில் குறிப்பிட்ட விவசாயிகள், வழமையான விளைச்சலைக் காட்டிலும் 50வீத அதிகரிப்பை பெற்றுக்கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலக மனிதாபிமான சமூகங்கள் அரசசார்பற்ற நிறுவனங்களினூடாக விவசாயிகள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக அரசாங்கம் மற்றும் தனியார் துறையினரது ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன.

கைத்தொழில் மயமாக்கல் மற்றும் நகர மயமாக்கல் என்பனவே விவசாய நிலங்களைத் தாக்கும் மிகப் பாரிய அச்சுறுத்தல்களாக அடையாளங் காணப்பட்டுள்ளன.

தனிநபர்கள் மற்றும் நிபுணர்களினூடாக உணவு மற்றும் விவசாய அபிவிருத்தி நுட்பங்களை முன்னெடுப்பதன் மூலம் விசாயிகளும், விவசாய நிலங்களையும் ஒட்டு மொத்த சமூகத்தையும் பாதுகாக்க முடியும்.

உள்நாட்டு கலவரங்கள் விவசாயத்துறையை எங்கனம் பாதித்துள்ளது என்பது குறித்து சர்வதேச சமூகம் கவனம் செலுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

இலங்கையின் வடக்கு கிழக்குப் பகுதியில் உள்ள பசுமையான விவசாய விளைநிலங்கள் விவசாயிகளுக்கு தடை செய்யப்பட்ட பிரதேசமாக காணப்படுகின்றது. இந்த நிலைமைகள் குறித்து சர்வதேச சமூகத்தின் கவனம் திருப்பப்பட வேண்டும்.

இவ்வாறான நிலைமைகளில் அரிசி விலையேற்றம் தவிர்க்க முடியாத ஒன்றாக அமையும்.

நெல் வயல்களில் தற்போது நிலைகொண்டுள்ள பளுப்புநிற தலைக்கவசங்களை அந்தப் பிரதேசத்திலிருந்து அகற்றி மீண்டும் பச்சைப்பசேல் என நெற் கதிர்கள் அசைவதற்கு சர்வதேச மனிதாபிமான அமைப்புக்கள் விரைந்து செயற்பட வேண்டும்.